எகிப்தின் புதிய அதிபராக சிசி பதவி ஏற்றார்

கெய்ரோ, ஜூன் 8- 

எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். 

ஆனால், ஒரு வருடம் கூட ஆட்சி நடத்த முடியாத நிலையில் இவருக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் அந்நாட்டு ராணுவம் இவரைக் கைது செய்து காவலில் வைத்தது. இவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் ராணுவத்தால் பெரிதும் ஒடுக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளால் கொந்தளிப்பும், வன்முறையும் நிறைந்து காணப்பட்ட எகிப்தில் கடந்த மாதம் இறுதியில் அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. 

இதில் தனது ராணுவத் தளபதி பதவியைத் துறந்த பீல்ட் மார்ஷல் அப்டெல் ஃபட்டா அல் சிசி அதிபர் வேட்பாளராக களத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக ஹம்தீன் சபஹி என்ற இடதுசாரி வேட்பாளர் ஒருவர் மட்டுமே போட்டியிட்டார். கடந்த மாதம் 25 ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மொத்தம் பதிவான வாக்குகளில் 96.6 சதவிகித ஓட்டுகளைப் வாங்கிய ஃபட்டா அல் சிசி வெற்றி பெற்றார். இதனையடுத்து, தலைநகர் கெய்ரோவில் இன்று நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டின் ஏழாவது அதிபராக அவர் பதவி ஏற்றார். 

அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, இன்னும் 4 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் அவர் நீடிப்பார். சிசியின் பதவி ஏற்பு விழாவையொட்டி கெய்ரோ நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கு வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்களுக்கு இன்றிரவு புதிய அதிபர் விருந்து அளிக்கிறார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger