ஆட்சி மாற்றம்தான் ஒரே தீர்வா? விதியை நோகும் மக்கள்


ஆட்சி மாற்றம்தான் ஒரே தீர்வா?
விதியை நோகும் மக்கள்
-    மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

இலங்கையின் சிறுபான்மையினர் மட்டுமின்றி பெரும்பாமையினரில் அதிகமான வீதத்தினரும் இன்றைய அரசின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் சலிப்புற்றிருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் உக்கிரம் பெறும் இன வன்முறைகள்,பெளத்த இனவாதிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு அதிகார வர்க்கத்தினரின் மறைமுக அங்கீகாரம்,சர்வதேச நெருக்கடி,நாடு இராணுவ மயப்படுத்தப்படுமோ என்கிற ஐயம்,சட்டம் சீர்குழைவு,பொருளாதார சிக்கல்கள்,,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு,பல்வேறு பிரிவினரினதும் மிகைத்த ஆர்ப்பாட்டங்கள்…. இப்படி,
இன்றைய இலங்கையின் அடக்கு ஒடுக்கு முறைகள் மலிந்த ஒரு குடும்ப ஆதிக்க அரசியலில் அல்லலுற்று, பல்வேறு துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வரும் பொதுமக்கள்…வெறுமனே பெருந்தெருக்கள் அபிவிருத்தியில் மட்டுமே திருப்தியடைவதாக இல்லை.
ஆக,முடிவுறாத பிரச்சினைகளுக்குத் தீர்வாக இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒரு ஆட்சி மாற்றத்தைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
“ நலிவுற்றிருக்கும் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான இன்றைய தேவையே புத்திசாதூர்யம் மிக்கதோர் புதிய தலைவரும், ஆரோக்கியமானதோர் புதிய அரசும்தான்” என்று ராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலகவும் அண்மையில் தெரிவித்திருக்கிறார்.
கொடுமையான ஆட்சியாளர்களால் மக்கள் சீரழிவுகளைச் சந்திக்க நேரும்போது… நாட்டைப் பாதுகாத்து…இறைமையை மதிக்கக்கூடிய சிறந்த ஆட்சியொன்றை அவர்கள் எதிர்பார்த்து நிற்பது நாட்டின் பிரதான எதிர்க்கட்சியிடமிருந்தோ,இல்லை ஒரே நேர்கோட்டில் பயணப்படக்கூடிய பலம்மிக்கதோர் கூட்டணியிடமிருந்தோதான்.
ஆனால்…நம்பவும்…களமிறங்கவும்…கரங்களைப் பலப்படுத்தவும் உயிர்ப்பானதோர் எதிர்க்கட்சியோ வலுவானதோர் கூட்டணியோ தற்போதைக்கு நம்நாட்டில் இல்லையென்பது துர்ப்பாக்கியம்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மமதையில்  அதிகார வர்க்கம் ஆடும் வெறியாட்டம் இப்போதைக்கு அடங்குவதாகவும். இல்லை.
வேலியே பயிரை மேயும் நிலைப்பாட்டில்…பகிரங்க அரச மற்றும் இராணுவ அரசியல்வாதியின் ஆதரவில் இயங்கும் பொதுபலசேனா,அமைச்சர்களான சம்பிக,விமல் போன்றோர் ஊட்டி வளர்க்கும் ராவணா பலய, சிங்கள ராவய போன்ற கடும்போக்கு,இனவாத இயக்கங்களின் வாள்முனைகளும் நாளுக்கு நாள் கூர் தீட்டப்பட்டே வருகின்றன.
இவர்களின் அட்டுழியங்கள் அதிகரித்து வரும் நிலையில்,
நாட்டில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்து,மக்கள் கிளர்ந்தெழும் தறுவாயில் குறிப்பிட்ட பிரச்சினையைத் தணிப்பதற்காக மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கமும் ஏதோ கடமைக்கென அவ்வப்போது தற்காலிகத் தீர்வுகளை முன் வைத்தாலும்…நிரந்தரத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டியே வருகிறது.
ஆயினும்,இந்த நியாய அநியாயங்களின் தீவிரத்தையோ…சிறுபான்மையை இலக்கு வைத்து அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அரசாங்கத்தின் குள்ளநரித் தந்திரோபாயங்களையோ உணறும் மனோநிலையில் நம்மில் பலபேர் இல்லையென்பதுதான் துர்பாக்கியம்.
தமது குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதியுச்ச ஆட்சி பீடத்தை, தமது குடும்பத்தவர்கள் எவரிடமுமன்றி… வெளியாரிடம் விட்டுக் கொடுக்காமல்,எப்போதும் தாம் நினைத்த போக்கில்…நினைத்ததை அனுபவித்து அரசோச்ச வேண்டும் என்று நினைக்கின்ற தற்போதைய ஆட்சியாளர்கள்,
புலிகளைத் தோற்கடித்துப் பெரும்பான்மைச் சிங்களவர்களிடத்தில் பெற்ற செல்வாக்கை தற்போது பல்வேறு காரணங்களால் படிப்படியாக இழந்து வரும் நிலையிலேயே…அதை மீண்டும் ஈட்டிக் கொள்வதற்காக…அவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்கிற கணிப்பில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த நிழல் யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..
மட்டுமன்றி,பெரும்பான்மைச் சிங்களவர்களது மொத்த வாக்குகளையும், அவர்களது ஆசிர்வாதத்தையும் பெறுவதன்  மூலம் மட்டுமே… சம்பந்தன்,ஹக்கீம், மற்றும் தொண்டமான்களினது தயவின்றி இலங்கையில் தம்மால் ஒரு பலமான பெளத்த ஆட்சியை…மாற்று மத சிறுபான்மையினரை அரசியல் ரீதியாக உள்வாங்க வேண்டிய கட்டாயமின்றி நிறுவ முடியுமென்பதும் இவர்களது நம்பிக்கை.
அரசாங்கத்தின் இந்தத் தந்திரோபாயத்திற்கமைவான காய் நகர்த்தலின் ஒரு அம்சம்தான்…தமக்கு எவரும் எப்போதும் போட்டியாகவே இருக்கக் கூடாது என்பதற்கமைய பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்,மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகளை உடைத்து வலுவற்றதாக்கிய செயல்.
எக்கட்சி எப்படி வேண்டுமானாலும் உடைந்து விட்டுப் போகட்டும்… பரவாயில்லை.ஆனால்,நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.உடைந்து சிதிலமாகிச் சிதறுவதைத்தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
அரசாங்கத்தின் கபடத்தனம் மட்டுமன்றி…கட்சிகள் பிளவுபடுவதற்கும்,குறித்த கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு அல்லது விலைபோவதற்கும் உட்கட்சிப் பூசல்கள்,பணம்…பதவியாசை சார் சுயநலம், முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களை இழக்க வேண்டிவரும் என்கிற பயமும் அச்சுறுத்தலும் என சுட்டக்கூடிய அளவில் பல காரணங்கள் இருந்தாலும்…
ஐ.தே.கவின் இன்றைய வலுவற்ற தன்மைக்கும்,தொடர் தோல்விகளுக்கும் மேற்படி உதிரிக் காரணங்களோடு முதன்மைப்படுவது,தலைவர் ரணிலின் இருப்புக்கான ஆசையும் பலவீனங்களும்தான்.
எப்படியோ,நிகழ்கால அரசில் நம்பிக்கையிழந்து,அதிருப்தியுற்றிருக்கும் பொதுமக்கள்,ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்திருக்கும் இன்றைய நிலையில்…அந்த இலக்கை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியிடமிருந்து அடைந்து கொள்ள முடியாமல் பரிதவித்துப் போயிருப்பதுதான் மிக்க கவலைக்குரிய விடயம்.
இன்று சகலரும் மாற்றமொன்றுக்கான அவசர அவசியத்தை உணர்ந்திருக்கின்ற போதும்..அதற்கான பயணத்தை எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்பதில்தான் தெளிவின்றிக் குழம்பியிருக்கிறார்கள்.
ருகாலம்… அசைக்க முடியாக் கோட்டையாகத் தலைநிமிர்ந்து…. கம்பீரமாக இருந்த…நம் நாட்டின் வரப்பிரசாதமான – மும்மதத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகம் நேசித்த அரசியல் கட்சி ஐ.தே.க.
ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் அடைந்த கையோடு இலங்கையில் முதல் அரசை நிறுவிய பெருமைக்குரிய அதேநேரம், பெருமைக்குரிய ஜாம்பவான்கள் உள்வாங்கப்பட்டிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ்,சிங்கள மஹாசபா,முஸ்லிம் லீக் ஆகியவற்றின் கூட்டாக உருவெடுத்த கட்சி.
1947-1956,1965-1970,1977-1994 என்று சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் 33 வருட காலம் தனித்து ஆட்சியமைத்ததோடு மட்டுமல்லாமல்,ஒருகாலம் (1977ல்) பாராளுமன்றில் 5/6 பெருன்பான்மையையும் தன்வசப்படுத்தித் தனித்து மிளிர்ந்த கட்சி.
இன்று…யார் கண் பட்டதோ… சாபமோ…செய்வினையோ…. ரணில் தலைமையில் மீண்டும் எழுந்து நிற்க முடியாத அளவில் தொய்ந்துபோய், பக்கவாத நோயாளியாக முள்ளந்தண்டில் காயப்பட்டுச்  சுருண்டுபோய் … ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளவும் முடியாத வக்கற்ற அவல நிலைக்கும் ஆட்பட்டு உட்கார்ந்திருக்கிறது.
கட்சிக்குள் எவர் சொல்பேச்சும் கேட்காமல்…எவரையும் மதிக்காமல்  …அதேநேரம், தனது எதிர்க்கட்சிப் பதவிக்கான வரப்பிரசாதங்களையும் சுகபோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்க…ஆளுந்தரப்பினருடன் திரைமறைவு உறவுகளைப் பேணிவரும் ரணிலுக்கு,
தனது சுய நலன்களுக்கு முன்னால்,நாளுக்கு நாள் நாடு குட்டிச் சுவராவது குறித்து கிஞ்சித்தும் கவலையில்லை என்பது ,இவருக்கு எதிராக இன்று பல தரப்பினரும் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள்.
உண்மைதான்.
அடிமட்டத்துப் பாமரர்கள்கூட அருவெறுப்பான – அசிங்கமான வார்த்தைகளில் விமர்சிக்கும் அளவில்…அண்மைக்காலங்களில் தன்னலம்மிக்கவராகத்தான் அதிகம் தெரிகிறார்…தற்போதைய சூழ்நிலையில் நம்நாட்டு எதிர்க்கட்சித் தலைமைக்கு லாயக்கற்ற இந்த ” சுயிங்கம் மாமா”.
இந்த ஜென்மத்தில் மஹிந்த ஆட்சியைக் கலைக்கவோ, புதியதோர் ஆட்சியை அமைக்கவோ இவரல் முடியாது என்பது இவர் மட்டுமன்றி இன்றைய சிறுகுழந்தையும் அறிந்ததோர் விடயமாகத்தான் இருக்கும் பட்சத்தில்…கைக்கு எட்டிய பதவியைத் துறந்து,,,அதன் சுகபோகங்களை விட்டு…அரசியலில் தோற்றுப்போனதோர் ஜடமாக சும்மா வீட்டில் போய் உட்காருவதற்கும் மனிதர் தயாரில்லை.
எப்படியோ, சகல தரப்பினரும் விரல் நீட்டக்கூடிய…நம் நாட்டின் இன்றைய முதல் ஜனநாயக விரோதியாக இருப்பது சாட்சாத் ரணில்தானென்றால் அதுவும் மிகையில்லைதான்.இந்நிலையில்
ஆளும் கட்சியும் வேண்டாம்.எதிர்க் கட்சியும் வேண்டாம்.கொள்கைகளற்ற  அதேநேரம் வெறும் சந்தணக்குச்சிக்கே விலைபோகக்கூடிய…ஆளுங்கட்சிக்கு குடைபிடிக்கும் சிறுசிறு கட்சிகளும் வேண்டாம்.
பின்னே…எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?
இலங்கை வாழ் மக்களின் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி இதுதான்.
பொதுமக்கள் குறிப்பாக சிறுபான்மையினர்  வாக்களிக்காமல் விட்டுவிடுவதும்…இன்று இனவாதம் கக்கி…பெருன்பான்மை சமூகத்தை மூளைச் சலவை செய்துவரும் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பாகும்.
அதேநேரம்,ரணில் தலைமையில்…பலஹீனமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்தும்… ஆகப்போவது ஒன்றுமில்லை என்கிற எண்ணத்தில்
மக்கள் வெறுத்துப் போய்த்தான் இருக்கிறார்கள்.
ஒரேயொரு கடைசி வாய்ப்பாக, வலுவானதோர் கூட்டணியில் சகலரும் விரும்பக்கூடியதோர் பொது வேட்பாளர் களமிறங்கக் கூடும் என்கிற நப்பாசை மட்டுமே சகலருக்கும் இப்போதைக்கான ஆறுதலாகயிருக்கிறது.
தவிர,சஜித் பிரேமதாசவை பிரதமராக அறிவித்து,ஐ.தே.க.சார்பில் ரணில் களமிறங்கினாலும் கூட ‘ மஹிந்த அன்ட் கோ ‘வைத் துரத்த முடியாதே போகலாம். (நிறைவு)
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger