2.6 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழும் குவைத் நாட்டில், 1.2 மில்லியன் அளவிலேயே உள்நாட்டு மக்கள் வாழ்கின்றனர் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் இருந்து வந்த மக்கள் இங்கு அதிகமாக உள்ளனர். பெருகி வரும் வெளிநாட்டு மக்கள்தொகையால் உள்ளூர் மக்கள் மருத்துவமனைகளில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் புகார் எழுப்பத்தொடங்கினர்.
இதற்குத் தீர்வு காணும் விதமாக, குவைத் அரசு, அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் காலை வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று வெளியிட்டுள்ள அரசு அறிக்கை ஒன்றில், இது கூறப்பட்டுள்ளது. ஞாயிறு முதல், ஆறு மாதங்களுக்கு சோதனை முறையில் இந்தத் திட்டத்தை, குவைத் நகரத்திற்கு மேற்கில் உள்ள ஜஹ்ரா நகரில் உள்ள பொது மருத்துவமனையில் அரசு செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இது பயனுள்ளதாக அமைந்தால், மற்ற இடங்களிலும் இதே முறையைப் பின்பற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சராக இருக்கும் முகமது அல் ஹைஃபி, சென்ற மாதம் இந்த யோசனையை அளித்தார். 1,100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருவதாகவும் ,விரைவில் இது செயல்படத் துவங்கும் இதன்மூலம் மருத்துவமனைகளில் நெருக்கடி குறையும் என்றும் அவர் தெரிவித்தார். அனைவருக்கும் இங்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்கப்படும் என்றும், அவசர நிலைமையின் போது அனைவரும் எந்த நேரத்திலும் சிகிச்சை பெறலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
குவைத் நாட்டவர்களுக்கு அங்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆனால், வெளிநாட்டவர்கள் மருத்துவ காப்பீடாக ஆண்டுதோறும் 175 டாலர் செலுத்தவேண்டும். அதுமட்டுமில்லாமல், எக்ஸ்ரே போன்றவற்றிற்கும் அவர்களிடம் குறைந்த அளவு தொகை வசூலிக்கப்படும். குவைத் நாட்டின் போக்குவரத்து அலுவலகங்களிலும், இதுபோன்று வெளிநாட்டவர்களின் விண்ணப்பங்கள் மாலை நேரங்களில் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன.
Post a Comment