உஷ்..! ஒரு நாடகம் அரங்கேறுகிறது.



M.T.M FARZAN  - ஆசிரியர் அழைப்பு மாத இதழ்.

மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும். பலாத்காரமாக மதம் மாற்றுவதற்கு எதிரான பிரேரணை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், பௌத்த நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பௌத்தத்தை ஒழிக்கும் சர்வமத அமைப்புகள் ஒழிய வேண்டும். பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே தலதா மாளிகையின் முன்னால் நான் முன் வைக்கும் பிரார்த்தனையாகும்.
இது கடந்த 24.05.2013 அன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து இறந்தபோவத்தை இந்திர ரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் வரிகள் என்று ஜாதிக ஹெல உறுமய தனது ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தியது.
புகைந்து கொண்டிருந்த முஸ்லிம் விரோதப் போக்கை பஞ்செனப்பற்றி எரியச் செய்ய தருணம் பார்த்திருந்த இனவாதிகளை உத்வேகமடையச் செய்த உந்து சக்தியாய் பிக்குவின் மேற்படி மரணம் அமைந்துள்ளது. அனைத்து மீடியாக்களும் இதனை ஊதிப் பெருப்பித்தது மட்டுமன்றி, தீக்குளித்த பிக்குவை பௌத்தத்தை காப்பதற்காய் உயிர் துறந்த உத்தமராகவும் சித்தரித்த வண்ணம் உள்ளன. சிங்கள பொது மக்களிடம் இவரது மரணம் குறித்த அனுதாப அலைகள் வேர் பிடித்து வருவதோடு, மரணித்த பிக்குவின் கோரிக்கைகளை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வலைகளும் வியாபித்த வண்ணம் உள்ளமை முஸ்லிம்களுக்கான அபாய சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது.
குறிப்பாக பொதுபல சேனா, சிங்கள ராவய, ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புகள் முன்பை விட பன்மடங்கு உத்வேகத்துடன் முஸ்லிம் விரோத போக்கை விஸ்தரிப்பதற்குண்டான பிரச்சார பீரங்கிகளாக மாறிவிட்டனர். சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (26-05-2013) இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மிருகவதை மற்றும் அடிப்படைவாதத்தால் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அமுல்படுத்துமாறு தனது உயிரை போவத்தே இந்திர ரத்தின தேரர் மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் பௌத்த மதத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உயிரைத் தியாகமாக்கினார். பௌத்தர்களின் தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சினை தான் அவர் உயிரைமாய்த்ததற்கு முக்கிய காரணம். இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் ஆகும். நாட்டில் அடிப்படைவாத தலையீட்டால் பௌத்த தர்மத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளால் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும். இதில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
இனவாதத்தை மட்டுமன்றி மத வெறியை கக்கும் இதுபோன்ற பிரச்சாரங்கள் பெரும்பான்மை சமூகத்திடம் பாரிய எதிர்வலைகளை நிச்சயம் தோற்றுவிக்கும். பொது பல சேனா மற்றும் ஹெல உறுமய நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புகள், இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பௌத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி 26-05-2013 அன்று பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டம், தீக்குளித்த போவத்தே இந்திரரத்ன ஹிமியின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 28-05-2013 அன்று பொதுபலசேனா பதுளை கிளை பதுளையில் நடாத்திய எதிர்ப்பு ஊர்வலம், மாடறுத்தல் மற்றும் மதமாற்றத்தை தடைசெய்யக் கோரி ஒன்றிணைந்த பௌத்த பிக்குகள் அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள எதிர்ப்பு மனு உள்ளிட்ட செயற்பாடுகள் யாவும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வை சமூமயப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகவே நோக்க வேண்டியுள்ளது.
சிதறிக்கிடக்கும் பௌத்தர்களை உணர்வுபூர்வமான ஒரு நிகழ்வின் ஊடாக ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவையை இனவாதிகள் உணர்ந்தனர். இத்திட்டத்தினை அடையும் பொருட்டு வகுக்கப்பட்ட வியூகமே பிக்குவின் தீக்குளிப்பு நாடகம். பிக்கு தீயினால் பற்றியெரியும் காணொளி செய்திகளில் வெளியிடப்பட்டன.  பிக்கு தானாக தீ மூட்டிக் கொண்டாரா? அல்லது பிறரால் தீ மூட்டத் தூண்டப்பட்டாரா? என்பதை  உண்ணிப்பாய் அவதானிக்கையில் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகையதொரு நாடகத்தை இனவாதிகள் கையிலெடுப்பதற்கான பின்புலம் யாது? அரசு இது குறித்து தெளிவான நிலைப்பாட்டினை அறிவிக்காமைக்கான காரணங்கள் என்ன? என்பது அலசப்பட வேண்டிய அம்சங்களாகும்.
தீக்குளித்தல் நாடகத்திற்குப்பின்னால் மறைந்திருக்கும் இலக்குகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
01- அரசியல் ரீதியானவை.
1.     அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை வேறு விடயம் நோக்கி திசை திருப்புதல்
மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் வாயு விலை உயர்வு உள்ளிட்ட அண்மைக் காலமாய் நாட்டில் ஏற்பட்டு வரும் விலையேற்றத்தினால் மக்கள் அரசின் மீது வெறுப்பில் உள்ளனர். எதிர் கட்சிகள் எல்லாம் அடிக்கடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இறங்குகின்றனர். அரசின் மீதான இவ்வதிருப்தியை குறைக்க வேண்டுமாயின் மக்கள் கவனத்தை வேறு விடயம் நோக்கி திருப்ப வேண்டும். இப்போது மக்கள், எமக்கு எமது மத ரீதியான கோரிக்கையை அரசு நிறைவேற்றித்தரவேண்டும் என்பர். அரசு அதனை நிறைவேற்றும் போது இயல்பாக மக்கள் அரசை ஆதரிக்கத் தொடங்குவர். பழையதை மறந்து விடுவர்.
1.     பூதாகரமாகும் மாத்தளை புதைகுழி விவகாரம், மத்தளை விமான நிலைய தோல்வி உள்ளிட்ட விமர்சனங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புதல்.
1.     ஓட்டு மொத்த மக்களினதும் கவனம் பிக்குவிடயத்தில் இருக்கும் சமயம் பார்த்து தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மூடுவிழா எடுத்தல். ஏனெனில், சுற்றியுள்ள முஸ்லிம்களுக்கு மாற்று இட ஒதுக்கீடு கூட இல்லாத நிலையில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனார். இதனை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
02- மத ரீதியானவை.
1.     முஸ்லிம்களுக்கெதிரான போராட்டத்தை வீரியப்படுத்துதல்.
அமெரிக்க விஜயத்தையடுத்து சர்வதேச வியூகங்களுடன் களமிரங்கியுள்ள பொது பல சேனா முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத கருத்துக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாயும், பௌத்தர்களுக்கு எதிரானவர்களாயும் சித்தரிப்பதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டும் வருகின்றது. அமெரிக்காவில் வெடித்த குண்டுத்தாக்குதலை இலங்கை முஸ்லிம்களுடன் முடிச்சுப்போட்டு அறிக்கை விட்டமை, பாகிஸ்தானிலிருந்து யாரோ கடத்திய கர்ப்பத்தடை சாதனங்களை முஸ்லிம்கள் தான் சிங்களவர்களின் கர்ப்பப் பாக்கியத்தை தடுப்பதற்காக கடத்தி வந்தனர் என்று கதையளந்தமை, சிங்கள இளைஞர்களின் சிந்தனைத்திறனை அழிப்பதற்காகவே முஸ்லிம்கள் பான் பராக்கை இலங்கைக்குள் விநியோகிக்கின்றனர். அல்காஇதா, ஹமாஸ், பதாஹ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற தீவிரவாத அமைப்புகள் இலங்கையில் இயங்குகின்றன. அரசு அவர்களை உடனே தடைசெய்ய வேண்டும் என்பன போன்ற அவதூறுகளை அமெரிக்க விஜயத்தையடுத்து இவர்கள் அள்ளி வீசி நஞ்சை கலந்தனர்.
இவர்களின் பொய் பிரச்சாரத்தினை நோக்கி மக்களின் கவனத்தை திருப்புவதற்காக தீக்குளிப்பு நாடகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
§  நாட்டில் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு பௌத்த அரசியல் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
§  பலவந்தமாக மதமாற்றம் செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
§  சர்வமத, சர்வஜன அமைப்புகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
§  மாடுகள் கொல்லப்படுவதற்கு முற்றாக தடை விதித்தல்  வேண்டும்.
§  உயர் நீதி மன்றம் ஒன்றே போதுமானது. காழி நீதி மன்றங்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றன.
§  முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
§  சிங்கள பாடசாலைக்கு முஸ்லிம்கள் பர்தா அணிந்து செல்வதை தடை செய்ய வேண்டும், முஸ்லிம்கள் கருப்பு ஹபாயா உடைகள் அணிந்து காரியாலயங்களுக்கு செல்வதையும், தொழில்களில் ஈடுபடுவதையும் தடை செய்ய வேண்டும்.
§  13ஆம் சட்டமூலம் நீக்கப்பட வேண்டும்.
§  பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டும்.
திட்டமிட்டு நடாத்திய தீக்குளித்தல் நாடகத்தை தொடர்ந்து இனவாதிகளால் பரப்புரை செய்யப்படும் நச்சுக் கருத்துக்களில் சிலதே இவை. ஆளும் அரசாகட்டும், எதிர் அணியிலுள்ள கட்சிகளாகட்டும் அனைத்தும் எhpயும் வீட்டில் பிடுங்குவதே இலாபம் எனும் மனப்பான்மையோடே நடந்து கொள்கின்றன. முஸ்லிம்களுக்காய் குரல் கொடுப்பது போன்று பாசாங்கு செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தத்தமது அதிகாரக்கதிரைகளை அழகு படுத்தி, அரசு தரும் பதவிப்பிச்சைகளை ஓடிச்சென்று கவ்விக்கொள்ளும் சுயநல சிந்தனையுடனே செயற்படுகின்றனர்.
இனவாத செயற்பாடுகள் தணிந்து விட்டன. இதன் பிறகு பொது பல சேனா எம்மை எதிர்க்க மாட்டார்கள். எனவே குனூத் ஓதுவதை விட்டு விடுங்கள் என்று ஹலாலை தாரைவாh;த்து அவசர அறிக்கை விட்ட ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட அவர்களின் துதிபாடிகள் காழி நீதிமன்றம், ஹிஜாப் உள்ளிட்ட விடயங்களிலும் அவசரப்பட்டு வாபஸ் வாங்கினால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
அநீதிகளின் போது அடங்கிப்போய் மௌனித்து நிற்கும் இதே அவல நிலை தொடருமானால் எதிர் காலம் மியன்மாரை நோக்கி எம்மை வெகுவிரைவில் இழுத்துச் செல்லும் என்பது மட்டும் உறுதி. சிந்திக்குமா நம் சமூகம்?

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger