பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி 180 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து புதிய பாராளுமன்றம் கடந்த 1-ந் தேதி கூடியது. அப்போது புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். 3-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் நவாஸ் ஷெரீப் கட்சியைச் சேர்ந்த சர்தாகி அயாஷ் சாதிக் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று பிரதமர் தேர்தல் நடந்தது. இதில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த ஜாவித் ஹஸ்மி, பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மத்தும் இன் பாஹிம் ஆகியோர் களமிறங்கினர்.
வாக்குப்பதிவில் நவாஸ் ஷெரீப் 244 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நவாஸ் ஷெரீப்புடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். பிரதமர் பதவி ஏற்கும் நவாஸ் ஷெரீப் தன்வசம் வெளியுறவு மற்றும் ராணுவம் உள்ளிட்ட துறைகளை வைத்துக் கொள்வார் என தெரிகிறது.
நவாஸ் ஷெரீப் ஏற்கனவே 2 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். தற்போது 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இது பாகிஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மின்பற்றாக்குறை, தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நவாஸ் ஷெரீப் சந்திக்க வேண்டியிருக்கும்.
Post a Comment