மாத்தளை அரச மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காணாமல்போனவர்களின் உறவினர்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு மாத்தளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது வேண்டுகோளின் படி மாத்தளை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக காணாமல்போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் மாத்தளைப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும், ஆனால் சட்டவிதிகளின் பிரகாரம் காவல்துறையினர் இந்தப் புதைகுழி தொடர்பாக காணாமல்போனோரின் உறவினர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகை அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை என்பதையும் தாம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாகவும் சட்டத்தரணி கூறினார்.1988-89 ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போயுள்ள 24 நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தாம் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவித்தல்களை மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் வெளியிடுமாறு மாத்தளை நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் 28-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment