7 வது ஜனாதிபதித் தேர்தலின் பிரச்சாரம் பட்டி
பொட்டியெங்கும் அணல் பரக்கும் தருணத்தில் நடப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சானிக்கே அழைத்துச் சென்றுள்ளது என்றால்
மிகையாகாது.
30 வருட யுத்தத்தை வென்று, விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் அதிவேக பாதைகளை அமைத்து மக்களின் மனங்கவர் தலைவனாக
இன்றளவும் நானே உள்ளேன் என்று மேடைகள் தோரும் முழங்கிய ராஜபக்ஷ அவர்கள் திடுதிப்பென்று
பொலிவுட் சினிமாக் கூத்தாடிகளான சல்மான் கான் மற்றும் ஜெக்குளின் உள்ளிட்ட குத்தாட்டக்
காரர்களை இலங்கைக்கு அதுவும் தனக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுவதற்காக அழைத்து வந்துள்ளமை
கல்விமான்களை மட்டுமின்றி கலப்பை பிடித்து உழுபவர்களை கூட திகைப்படையச் செய்துள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் முன்பொருபோதும்
இல்லாத சீரழிந்த இந்திய பாணியிலான சினிமா மயப்பட்ட அரசியல் முன்மாதிரியொன்றிற்கு இதன்
மூலம் மஹிந்த அவர்கள் வித்திட்டுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் பல்வேறு
பகுதிகளில் வெள்ள அணர்த்தத்தினால் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்து
80 000 க்கும் அதிகமான குடும்பங்கள் இல்லிட, உணவு,
உடை வசதியின்றி முகாம்களில் முடங்கி, 30 க்கும்
மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள இந்நிலையில் பல கோடிகளுக்கு
மேல் செலவழித்து கூத்தாடிகளை வரவழைத்து அரசியல் நடாத்தும் அளவுக்கு மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள
வங்குரோத்து நிலை தான் என்ன?
சல்மான் கானின் வருகை உணர்த்தும் செய்திகள்
ஏராளம் இருந்தாலும் ஒரு சிலதை மட்டும் அலசுவதே இவ்வாக்கத்தின் நோக்கம்.
1. என்னதான் தன்னை இந்நாட்டின் மன்னனாக கற்பனை செய்து கொண்டாலும்
மைத்திரியின் வருகையால் மஹிந்தவின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருவது
மட்டுமின்றி, மைத்திரியின் கூட்டங்களுக்கு அலைமோதும் மக்கள் வெள்ளத்தில் கால்
பங்கையாவது மஹிந்தவின் பொதுக் கூட்டங்களில் காண முடியவில்லை என்பதுவே யதார்த்தம்.
2. இவ்வாறு சரிவடைந்து வரும் வாக்கு வங்கிகளை சல்மான் கான் என்ற
கூத்தாடியின் மீதுள்ள பக்தியை வைத்து தக்க வைப்பதற்கு முயல்கிறார் மஹிந்த.
3. வளமான எதிர்காலத்தை உருவாக்குகிறேன் என்று வாக்குக் கேட்கும்
மஹிந்த அவர்களின் மேற்படி செயல் எதிர்கால சந்ததிகளை மானங்கெட்ட கூத்தாடிகளுக்கு கூஜா
தூக்கும் கலாச்சாரத்தின் பால் தள்ளிவிடுவதாகவே அமைந்துள்ளது.
4. தன் அரசியல் இருப்பை ஸ்தீரப்படுத்துவதற்காய் அரை குறை ஆடையணிந்து, மானத்தை
இழந்து குத்தாட்டம் போடும் நடிக நடிகைகளுக்கு சிறப்புக் கதிரை வழங்கி, விசேட அதிதியாக்கும் கேடுகெட்ட கலாச்சாரத் திணிப்பு 30 வருட கோர யுத்தத்தின் தாக்கத்தை விட அதி பயங்கரமானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள்
அறியாதது ஏனோ?
5. இது கால வரை அங்கங்களை மறைத்து ஆடையணிந்த முஸ்லிம் பெண்களின்
ஹிஜாபை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுபலசேனா கூக்குரலிட்டதும் இது போன்ற குட்டைப்பாவாடை
மாதசிரோமணிகளை இறக்குமதி செய்வதற்குத் தானோ? கௌதம புத்தரின் பஞ்ச சீலத்தை உச்சாடனம் செய்து
கொண்டு, பௌத்த கலாச்சாரத்தை இந்நாட்டில் காப்பாற்ற வேண்டும் என்று
நீலக்கண்ணீர் வடிக்கும் இனவாதிகளின் தர்மத்தை காக்கும் இலட்சனம் இது தானோ?
6. ஆசியாவின் ஆச்சரியமாய் இலங்கை ஜொலிக்கும் என்ற வார்த்தையின்
உள்ளார்ந்த அர்த்தம் அங்கங்களை காட்டி அழைந்து திரியும் அசிங்கப்பட்டவர்களின் உருவாக்கம்
அதிகரிக்கும் என்பதுவோ?
எது எப்படியிருப்பினும், அடிமேல்
அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் அசைக்க முடியா தலைவனாக இருந்த மஹிந்தவின்
அதிகாரக் கதிரை தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அதனை தக்கவைப்பதற்காகவும்,
தவறிப்போகும் வாக்குவங்கிகளை எப்பேர்ப்பட்டாவது மீளப்பெற வேண்டும் என்பதற்காகவும்
மஹிந்தவினால் எடுக்கப்படும் இறுதிக்கட்ட முன்னெடுப்புகளில் ஒன்றே கூத்தாடிகளின் இறக்குமதி!
இது மஹிந்தவின் உள்ளத்தில் குடிகொண்டுள்ள
தோல்வி பயத்தை தோலுரித்துக் காட்டும் பட்டவர்த்தனமான நிகழ்வு என்பதே சாலப் பொருந்தும்.
Post a Comment