நாட்டில் பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே அண்மைக்காலமாக பதற்றம் நிலவிவரும் நிலையில், நாட்டின் பெரும்பான்மை இனத்தவர் எப்போதுமே தீவிரவாதத்திற்கு இடங்கொடுத்ததில்லையெனவும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கிட இதுவே தருணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாகொல்லகமவில் திங்கட்கிழமை நடைபெற்ற மதவைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியதுடன், பௌத்தர்களும், தேரர்களும் எப்போதும் தீவிரவாதிகளாக இருக்கவேயில்லை எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ச்சி கண்டுவருவதாக குற்றம் சுமத்தி அதற்கெதிராக பௌத்த தேசியவாதக் குழுவான பொதுபல சேனா அமைப்பு அண்மைக்கால பிரசார இயக்கமொன்றை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
முஸ்லிம்களுக்கெதிரான பிரசார இயக்கத்தின் பின்புலத்தில் அரசாங்கமே உள்ளதென எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்த பௌத்த பிக்குகளின் படுகொலைச் சம்பவத்தை நினைவுறுத்திய ஜனாதிபதி அங்கு தொடர்ந்து பேசுகையில்,
பயங்கரவாதத்தின் கொடூரத்தன்மையை எமக்கெல்லாம் ஞாபகப்படுத்தும் வகையில் இத்தகைய ஞாபகார்த்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும், ஆயினும்,அவை கோபாவேசத்தைக் கிளப்பி பழிவாங்குவதற்கு வழிசமைக்கலாகாதெனவும், கடந்த முப்பதாண்டுகளுக்குமேலாக நாம் இத்தகைய பயங்கரவாத செயற்பாடுகளுக்கே முகம் கொடுத்து வந்தோமெனவும் மேலும் குறிப்பிட்டார்
.
Post a Comment