பிரிட்டனில் வீடுகளிலும் கடைகளிலும் விரயமாகும் உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க அரசாங்கம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவில் 20% பயன்படாமலேயே குப்பைக்குப் போகிறது
உலகின் மதிப்புமிக்க வளங்களைப் பயன்படுத்தி இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்துவிட்டு, அதைப் பிற்பாடு எவருமே பயன்படுத்தவில்லை என்பது வளங்களை வீணாக்குவதற்குச் சமமானது. எனவே உணவு விரயமாவதைத் தடுக்க வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.
பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவில் மற்றும் பானங்களில் இருபது சதவீதத்தை அவர்கள் பயன்படுத்தாமலேயே குப்பையில் வீசுவதாக மதிப்பிடப்படுகிறது.
- உணவு உற்பத்தியிலும், சில்லரை வியாபாரக் கடைகளிலும் உணவு விரயமாவதைக் கட்டுப்படுத்தும் இலக்குகளை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்,
- அவ்விலக்குகளை எட்டத் தவறுகிற நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,
- ஒருவர் பயன்படுத்தாத உணவுப் பொருள் விரயமாகாமல் அவை பயன்படுத்தப்படக்கூடிய இடங்களில் விநியோகிக்கப்படுகின்ற திட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்
என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.
அதிகமான உணவுப் பொருட்களை விரயம் செய்யக்கூடாது என வாதிடும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்றை தேசிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு இவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
Post a Comment