கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களவை மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கே.ரகுமான் கான் கூறியது: கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மறுப்பதற்கான வாய்ப்பு இல்லை.
எனெனில், இது புதிய விஷயம் அல்ல. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, முஸ்லிம்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பம் என்றார்.
மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, முஸ்லிம்கள் உள்பட இதர பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உள் ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், எந்த அடிப்படையில் 4.5 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment