தெஹிவளையில் இடம்பெற்ற ரயில் குண்டுவெடிப்புக்கான சதித்திட்டத்தில் பங்கெடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
வழக்கின் முதலாம், இரண்டாம் குற்றவாளிகளுக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனையும், மூன்றாவது குற்றவாளிக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மூவரும் ஏற்றுக்கொண்டதையடுத்தே அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டப்பட்டவர்களான மக்ஸிலன், லோகநாதன், திருமகள் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தங்களுடைய கட்சிக்காரர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தங்களுடைய கட்சிக்காரர்கள் 16 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் தண்டனையை குறைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மூன்றாவது சந்தேநபரான திருமகள் சார்;பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா, சந்தேகநபர் 16 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் இருக்கும் போது அவர் குழந்தையொன்றையும் பிரசவித்தார் என்றும் சுட்டிக்காட்டியதுடன் முதலாவது சந்தேகநபரை இவரின் கணவன் எனவும் சுட்டிக்காட்டியதுடன் குழந்தையை பராமரிப்பதற்கு எவரும் இல்லை என்றும் இவர்களின் நிலைமையை கவனத்தில் கொண்டு தண்டனையை குறைக்குமாறும் கோரிநின்றார்.
இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கின் முதல் இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 10 வருடங்களும் மூன்றாவது குற்றவாளிக்கு 5 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களான சுகராஜா மற்றும் சுதர்ஷனன் ஆகியோரை குற்றவாளிகள் அல்லவென அறிவித்ததுடன் விசாரணையை செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த ரயிலில் 1996 ஆம் ஆண்டு யூலை 27 ஆம் திகதி தெஹிவளையில் வைத்து மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதுடன் 400 பேர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment