அண்மையில் தென்னிலங்கையில் முஸ்லீம்கள் மீதான பொதுபல சேனாவின் தூண்டுதலினாலான தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அழுத்தங்களால் பிரதான ஊடகங்கள் பலவும் தமக்கு தாமே சுயதணிக்கை செய்து கொண்டவாறு செய்திகளை வெளியிட்டிருந்தன.
சிறீலங்காவின் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த படைபுலனாய்வு கட்டமைப்பினை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இணையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் மற்றும் ருவிட்டர் என்பவை மிகப்பெரிய அளவில் அங்கு நடந்தவற்றை வெளியில் கொண்டுவருவதற்கு பங்களிப்பினை ஆற்றியிருந்தன.
அச்சமூக தளங்களே புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆவணங்களை வெளிக் கொணர்ந்திருந்தன. அத்துடன் அவை பிரதான அச்சு மற்றும் இலத்தினியல் ஊடகங்களின் பணிகளை கேள்விக்கு உள்ளாக்கியுமிருந்தன.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தேவையாயின் முடக்குதென திட்டங்கள் வகுக்கப்பட்டு முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன. எனினும் கடுமையான எதிர்ப்புக்களை அடுத்து அம்முயற்சி முன்னெடுக்கப் படவில்லை என ஜனாதிபதியே தெரிவிக்க வேண்டியதாயிற்று. ஆயினும் அதனை தாண்டி பரீட்சார்த்தமாக இலங்கை முழுவதும் ஒரு நாளினில் குறிப்பிட்ட நேரம் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டிருந்தது. அம்முயற்சி வெற்றியும் பெற்றிருந்தது.
இந்நிலையில் கூடிய அளவில் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டிலுள்ள யாழ்.குடாநாட்டிலும் வடபுலத்திலும் அதனை கட்டுப்படுத்துவது மற்றும் வடிகட்டுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
சிறீலங்கா படை புலனாய்வு கட்டமைப்பினை பயன்படுத்தி அதனை செய்விக்க திட்டமிடப்பட்டுமுள்ளது. அவ்வகையில் தெரிவு செய்யப்பட்ட 40 படை புலனாய்வு அதிகாரிகளிற்கான பயிற்சிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. இப்பயிற்சிகளை மொழி அடிப்படையில் தமிழ் வல்லுனர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவே படைத்தரப்பு முற்பட்டுள்ளது.
அவ்வகையில் யாழப்பாணம் பலாலி வீதியில் திருநெல்வேலியிலுள்ள முன்னணி கணனி மையமொன்றில் இப்பயிற்சிகள் கடந்த ஒரு மாதகாலத்திற்கு மேலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கூடிய அளவில் தாயக செய்திகள் இத்தகைய சமூக வலைத்தளங்கள் ஊடாகவே புலம்பெயர் ஊடகங்களை வந்தடைவதாகவும் அதே போன்று புலம்பெயர் தேசங்களிலிருந்து பரப்புரைகள் தாயகப்பகுதிகளை சென்றடைவதாகவும் சிறீலங்கா அரசு நம்புவதாக தெரிகின்றது. ஏற்கனவே அத்தகைய செயற்பாடுகளை முடக்க முன்னணி உள்ளுர் இணையங்கள் அரச தரப்பினால் பினாமிகள் மூலமாக கொள்வனவு செய்யப்பட்டு இயக்கப்பட்டும் வருகின்றன. அத்துடன் பல இணையங்கள் சிறீலங்காவின் பார்வையிட முடியாதவாறு அரசினால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment