88.7 சதவீதம் வாக்குகளை பெற்று பஷர் அல் ஆசாத் சிரியா அதிபராக மீண்டும் தேர்வு



சிரியாவில் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான பஷர் அல் ஆசாத் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். 

அவர் 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 14 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், மீண்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார்.

பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 65 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் எதிர்பாராத வகையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க திரண்டதால் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. 

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தற்போதைய அதிபராக உள்ள பஷர் அல் ஆசாத், மொத்தம் பதிவான வாக்குகளில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட 2 பிரதான வேட்பாளர்களான ஹஸன் அல் நௌரி மற்றும் மஹெர் ஹஜ்ஜர் ஆகியோர் முறையே 4.3 மற்றும் 3.2 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இதன் மூலம் சிரியாவின் அதிபராக தனது பதவியை மூன்றாவது முறையாக பஷர் அல் ஆசாத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger