இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.
இலங்கையைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க தமிழக அரசு உட்பட பல்தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில், இந்த இரு அதிகாரிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெலிங்டன் வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம் பெற்றன.
தமிழக மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கை படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என்று இந்திய இராணுவ அமைச்சர் ஏ கே அந்தோனி கூறிய நிலையிலும் இவர்கள் அந்த மையத்துக்கு பயிற்சிக்காக வந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு முன்னரும் இவ்வகையில் இலங்கையிலிருந்து இந்தப் பயிற்சி மையத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் தமிழகத்திலிருந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக வேறு இடங்களுக்குச் சென்றனர் அல்லது மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பினர்.
Post a Comment