தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பமாகுமென அரசாங்கம் அறிவிப்பு / வாழைச்சேனையில் ஏழு இளைஞர்கள் கைது

 

வாழைச்சேனையில் ஏழு இளைஞர்கள் கைது-
இராணுவத்தினரால் வாழைச்சேனையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சுற்றிவளைப்பு தேடுதல் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோஸ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தனர். அத்துடன் அவ்விடத்தில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்தே இராணுவத்தினரால் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பமாகுமென அரசாங்கம் அறிவிப்பு-
உறுப்பினர்களை தெரிவு செய்யாமல் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவை அலட்சியப்படுத்துமாயின் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று சபைமுதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குவுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவு செய்து அறிவிக்குமாறு, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 உறுப்பினர்களின் பெயர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களுக்கு எவரையும் இதுவரையிலும் நியமிக்கவில்லை என்றால், பெரும்பான்மை உள்ள அரச உறுப்பினர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க சபாநாயகரிடமிருந்து தங்களுக்கு எந்தவொரு அழைப்பும் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார்.
தாங்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்பதென்றால், வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை செப்டெம்பரில் நடத்த வேண்டும், அந்த தேர்தலை கண்காணிப்பதற்காக பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்னர் சிவில் சமூகத்திலிருந்து ஆளூநராக ஒருவரை வடக்கிற்கு நியமிக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் சம்மதித்தால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger