சீன – சிறிலங்கா உறவு விவகாரத்தில் இந்தியா ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா – சீன உறவுகள் வலுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் சிறிலங்கா எவ்வாறு தலையிடாமல் இருக்கிறதோ, அதேபோன்று, சீனாவுடனான எமது உறவுகள் விவகாரத்திலும் இந்தியா தலையிடக் கூடாது.
உண்மையில் சீனாவுடன் இந்தியா மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது.
இருநாடுகளும் தமக்கிடையான பிரச்சினைகளை சுதந்திரமாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனைய நாடுகள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான போர் வலயமாக சிறிலங்காவைப் பயன்படுத்திக் கொள்ள எம்மால் அனுமதிக்க முடியாது.
1962ம் ஆண்டு சீன – இந்தியப் போரின் போது, சிறிலங்கா, பர்மா, கானா, கம்போடியா, எகிப்து, இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகளின் கூட்டத்தைக் கூட்டி, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்க நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் இந்தியாவின் ஒருபகுதி அப்போதே சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கும்.
உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரங்களில் சீனா முக்கியமான பங்கை வகிக்கிறது.
உலகின் 60 சதவீதமான முதலீட்டு நிதியும், மூலதன வளங்களும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும், அது தான் உண்மை.
இது ஒன்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையல்ல.
சிறிலங்காவின் முன்னேற்றத்தைக் குழப்புவதற்கு வடக்கு மக்களைப் பயன்படுத்த இந்தியா முற்பட்டால், நாமும் அதற்கெதிராக செயற்படுவோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Post a Comment