மாகாணசபைகளின் காணி, போலிஸ் அதிகாரங்கள் மட்டுமல்ல, எல்லா அதிகாரங்களும் பறிபோகின்றது - மனோ கணேசன்






13ம் திருத்தத்தை திருத்துவதற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை அல்லது பெரும்பான்மை மாகாணசபைகளின் ஒப்புதல்கள் இருந்தால் போதும் என்ற புதிய திருத்த சட்டமூல யோசனையை அமைச்சரவையில் அரசாங்கம் நாளை சமர்பிக்க போகின்றது.

இது காணி, போலீஸ் அதிகாரங்களை மீளப்பெறுவது என்ற திட்டத்தைவிட மிகவும் மோசமானது. ஏனென்றால் காணி, போலீஸ் அதிகாரங்கள் மட்டும் அல்ல, அவற்றைவிட இனிமேல் எஞ்சியுள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள எந்த ஒரு மாகாணசபைகளிடம் இருந்தும் வெறும் பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் மீளப்பெறுவதற்கான அதிகாரத்தை இந்த புதிய யோசனை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குகின்றது.

எனவே 13ம் திருத்தத்தை பாதுகாப்போம் என்று அரசாங்கத்துக்குள் இருந்தவாறு கூறிவந்த ஈபிடிபி, முஸ்லிம் காங்கிரஸ், இதொகா கட்சிகளை சார்ந்த அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா, ரவுப் ஹக்கீம், தொண்டமான் இடதுசாரி அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியு குணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோர் தம் நிலைப்பாடுகளை அரசாங்கத்துக்குள்ளே அமைச்சரவையில் பகிரங்கப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கம் கொண்டு வர தீர்மானித்துள்ள புதிய சட்டமூலத்தின் பிரகாரம் இனிமேல் எதிர்காலத்தில் மாகாணசபைகளின் எந்த ஒரு அதிகாரத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளும் சட்ட மூலங்கள் இன்று இருப்பதைப்போல மாகாணசபைகளின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் கிடையாது என்ற நிலைமையும், அவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றால் போதும் என்ற நிலைமையும், உருவாகின்றது. 

அதேபோல் இரண்டு மாகாணசபைகள் சுய விருப்பத்தின் மூலம் ஒரே மாகாணசபையாக இணைந்து கொள்ளவும் முடியாது. இதற்கான சரத்தும் நாளைய அமைச்சரவை யோசனையில் உள்ளது.

திவிநேகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது அது வட மாகாணசபையின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும், அந்த ஒப்புதலை ஆளுநர் தர முடியாது என்றும் நாம் நீதிமன்றம் சென்றோம். நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் அந்த தீர்ப்பே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ஆபத்தாகவும் முடிந்தது.

இப்போது இந்த அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டு வந்து விட்டு, வட மாகாணசபை தேர்தலை நடத்திவிட்டு, பொதுநலவாய மாநாட்டையும் நடத்திவிட்டு, அதன் பின்னர் பாராளுமன்றத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு இருக்கின்ற போலிஸ், காணி அதிகாரங்களை பறிக்க திட்டம் தீட்டியுள்ளது. உண்மையில் இந்த அரசாங்கம் மட்டும் அல்ல, இந்தியா, அமெரிக்க அரசாங்கங்களும் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டன என்பது இன்று தெளிவாகின்றது. 

அமைச்சரவைக்கு நாளை கொண்டுவரப்படும் இந்த யோசனை, பிறகு சட்டமூலமாக பாராளுமன்றம் கொண்டுவரப்படும். அதன்போது, அரசாங்கத்தின் இந்த நயவஞ்சக போக்கை எதிர்த்து அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிர்கட்சி வரிசையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றம் சென்று தமது முழுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger