ஊடக நெறிமுறைகள் குறித்து இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக இருப்பதாகவே பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ள நிலையில், அரசின் இந்த முன்நகர்வு பல்வேறு மட்டங்களில் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கம் ரசனைக்கு எதிராகவும், நாட்டின் அற நியமங்களுக்கு எதிராகவும் செய்தி வெளியிடக் கூடாது என்கிறது இந்த சட்டத்தின் முதல் விதி. நாட்டின் வெளி உறவுகளை கெடுக்கும்படி செய்திகளை வெளியிடக் கூடாது, மத மாச்சர்யங்களை உருவாக்கக் கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விடயங்களையோ, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் விடயங்களையோ, நிர்வாக அமைப்பு, நீதித்துறை மற்றும் நாடாளுமன்றத்தின் மாண்பை குறைக்கும் செய்திகளையோ வெளியிடக் கூடாது என்று ஒரு நீண்ட பட்டியலே அரசால் போடப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்களும், பத்திரிக்கை அலுவலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இறுதிகட்டப் போரின் போது சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இது வரை யாரும் தண்டிக்கப்படவில்லை. இலங்கை அரசை விமர்சித்து எழுதும் பத்திரிக்கையாளர்களை "துரோகிகள்" என்று வர்ணித்த இலங்கை அமைச்சர் ஒருவர், நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களின் கை கால்களை முறிப்பேன் என்று எச்சரித்திருந்தார். அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, இலங்கை ஊடகவியலாளர்கள் பலர் தற்போது நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். இருக்கின்ற ஊடகங்களும் அரசை விமர்சிக்க தயங்குவதாக கூறப்படும் நிலையில், ஊடகங்களை நெறிப்படுத்த அரசு இந்த புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது.
கவலைகள்
"இந்த சட்டம் குறித்து பல கவலைகள் உள்ளன. இந்த சட்டத்தின் பிரிவு 1 ஏ வில் மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்கும் விடயங்கள் குறித்தும், அதற்கு அடுத்த பிரிவு வெளி நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் விடயங்களையும் பேசக் கூடாது என்று கூறுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இவை குழப்பங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இது ஊடகங்களை மேலும் அடக்கவும், சுய தணிக்கை செய்யவுமே அரசால் பயன்படுத்தப்படும் என்பதே எனது அச்சமாக இருக்கிறது" என்றார் கிரவுண்ட் வியூஸ் என்கிற இணைய சஞ்சிகையின் ஆசிரியர் சஞ்சன ஹத்துட்டுவ.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களின் துப்பாக்கி நிழலில்தான் பல ஆண்டுகளாக தமிழ் ஊடகவியலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். போர்க் குற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அரசாங்கத்தை கோபப்படுத்தும் என்பதால் அதுபோன்ற செய்திகளை நேரடியாக வெளியிட தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்கள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுடன் விவாதம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை சில தமிழ் பத்திரிக்கையாளர்கள் முன்வைத்துள்ளனர். இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட தமிழ் ஊடக கூட்டமைப்பின் தலைவர் அனந்த பாலகிருட்டிணன், இந்த சட்டத்தின் மூலம் உள்ளூர் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்தினாலும், இலங்கையில் இருந்தும் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் செயல்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும் என்றார்.
குழந்தைகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படும் விதம் தொடர்பான விதிமுறைகள், சடலங்களின் புகைப்படங்களை ஊடகங்கள் மோசமான முறையில் வெளியிடுவதை தடுக்கும் நெறிமுறைகள், தற்கொலை செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாடு போன்ற விடயங்களை தான் வரவேற்பதாக கூறும் முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் எம் எ எம் அமீன், அதேசமயம் இந்த புதிய சட்டம் தொடர்பாக சில கவலைகளையும் முன்வைத்தார். ஏற்கனவே சுய தணிக்கை அதிகமாகக் காணப்படும் இலங்கையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அச்சம் வெளியிட்ட அவர், இந்த சட்டம் குறித்து ஏழு ஊடக அமைப்புக்கள் கூடி விவாதிக்க இருப்பதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
"அனைத்துக்கும் பொறுந்தக் கூடிய ஒரு விதிமுறையை கொண்டுவர அரசால் முடியாது "
சஞ்சன ஹத்துட்டுவ
ஊடகங்களை நெறிப்படுத்துவது எப்படி என்ற விவாதம் பல்வேறு நாடுகளில் தற்போது நடந்து வருகிறது. ஊடக கூட்டமைப்புகளால் உருவாக்கப்படும் சுய கட்டுப்பாடுகள், அவற்றை நெறிப்படுத்தும் ஊடக அமைப்புக்கள் போதிய பலனைத் தராமல் இருப்பதாக இங்கே ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடைபெற்ற லெவிசன் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசு ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னர், ஊடக சூழல் குறித்த பரந்து பட்ட புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சஞ்சன ஹத்துட்டுவ.
புதிய ஊடகங்கள் என்று வர்ணிக்கப்படும் நுண் வலைப்பதிவுகள், வலைப்பூக்கள், தனிப்பட்ட பதிவுகளில் எழுதுபவர்கள், பெயரை வெளியிடாமல் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்கள், அச்சுப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மரபுசார் பத்திரிகைகள் நடத்தும் இணைய தளங்கள் என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய பொதுவான ஒரே விதிமுறையை கொண்டுவர முடியாது என்று வாதிடும் அவர், இன்றைய ஊடகங்களின் பன்முகத் தன்மையை உணர்ந்து இது குறித்த ஒரு உரையாடலை அரசு உடனடியாக துவக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
Post a Comment