இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பூரண விசாரணைகளை நடத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் (ஆசிய பிராந்தியம்) வலியுறுத்தியுள்ளது.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடுமையான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ள இவ்வமைப்பு, மோதல் சம்பவங்களில் சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தது, சொத்துக்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ,விசாரணை நடாத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனா போன்ற கடும்போக்குடைய தேசியவாத இயக்கங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன் நின்றுவிடாது, நாட்டின் சகல சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன சமூகங்களினதும் பங்களிப்புடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முனைப்புக்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அவர், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment