திருமணம் முடிப்பதாகக் கூறி, பெண்ணொருவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த நபரை ஹட்டன் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி அவரை நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடந்த 31 ம் திகதி அழைத்து சென்று; துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து, குறித்த பெண்ணை அந்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையே ஹட்டன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் அமில ஆரியசேனவின் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்ப்படுத்திய போது, அவரை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
மணமகள் தேவை என பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து, அந்த விளம்பரத்திற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி அழைப்புகளின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறான செயல்களில் அவர் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment