இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!:முக்கிய புள்ளி விபரங்கள்


இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட படி ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் அனுட்டிக்கப் படுகின்றது.
உலகளாவிய ரீதியில் பெருகி வரும் அகதிகளின் பிரச்சினைகள் குறித்து உலக மக்களிடையே கவனத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். எனவே நிகழ்கால உலகில் அகதிகள் பிரச்சினை குறித்த முக்கிய புள்ளி விபரங்கள் கீழே,
உலகம் முழுதும் தற்போது அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனைத் (5 கோடி) தாண்டி விட்டது. இந்த எண்ணிக்கை 2 உலகப் போருக்குப் பின்னர் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை என்பதுடன் மொத்த உலக சனத்தொகையில் 0.7% வீதமும் ஆகும். இன்றைய உலகில் அகதிகள் பிரச்சினை தலைவிரித்தாடும் முக்கிய நாடுகளாக சிரியா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை விளங்குகின்றன.
உலகம் முழுதும் 33 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலும் 17 மில்லியன் மக்கள் வரை வெளிநாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் அகதிகள் எண்ணிக்கை 6 மில்லியனால் அதிகரித்துள்ளது.
முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஆனால் தொடர்ந்து நீடித்து வரும் போர்களாலும் அகதிகளை ஏற்றுக் கொள்ள செல்வந்த நாடுகளின் அர்ப்பணிப்பு போதுமானதாக இல்லாததுமே உலகில் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரக் காரணம் என ஐ.நா தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போர் மட்டுமன்றி அகதிகள் உருவாக இன்ன பிற காரணங்களாக வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பஞ்சம் போன்றவையும் விளங்குகின்றன. மேலும் உலகில் தற்போது உள்நாட்டுப் போர் காரணமாக உருவாகி வரும் அகதிகளில் 55% வீதம் சிரிய யுத்தத்தால் உருவானவர்கள் என்பதுடன் தற்போதுள்ள உலகில் உள்ள அகதிகளில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் உலகில் அதிகளவான அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் நாடுகளாகப் பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகியவை விளங்குகின்றன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger