நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறுந்தகவல்கள், வீதிப் போராட்டங்கள், இளைஞர்களை திசை திருப்பி மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரேபிய நாடுகளில் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக சில மத்திய கிழக்கு அரசாங்கங்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈராக், லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் மாற்றியமைக்கப்பட்ட போதிலும் அமைதி ஏற்படவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிலும் இதேவிதமான கிளர்ச்சிகளை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என அவரது பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 23ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி வரையில் கூட்டம் நடைபெறவுள்ளது. 2011ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். தமிழ் மொழியிலும் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
Post a Comment