இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்திக்கவுள்ளார். இதுதவிர இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸையும் நவனீதம்பிள்ளை சந்திப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நவனீதம்பிள்ளை நேற்று திருகோணமலை சென்றிருந்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரால் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நவனீதம்பிள்ளையை ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஏழுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment