தமிழினி வட மாகாணசபைத் தேர்தலில் போட்டி? / பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்று நாடகமாடிய தாய் / யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்



 


தமிழினி வட மாகாணசபைத் தேர்தலில் போட்டி?- 
புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்று நாடகமாடிய தாய்- 
இந்நாள் உலகெங்கிலும் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக சென்னையை சேர்ந்த ஒரு பெண் பொலிஸில் பொய் புகார் அளித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கமலாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததால் வைத்திய செலவுகளை சமாளிக்க முடியாமல் கமலா சிரமப்பட்டார்.
அவரது நிலைமையை கண்ட கமலாவின் அத்தை, ஒரு குழந்தையை யாருக்காவது விற்று விடலாம் என்று ஆலோசனை கூறினார். கமலாவும் அதற்கு சம்மதித்தார்.
அதே பகுதியில் வசிக்கும் முபாரக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு வரிசையாக 3 பெண் குழந்தைகள் உள்ளன. தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த முபாராக்குக்கு வலைவிரித்த கமலாவின் அத்தை, அவரிடம் ஒரு ஆண் குழந்தையை விற்றுவிட ரூ.60 ஆயிரத்துக்கு பேரம் பேசினார்.
முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்தை தந்த முபாரக், குழந்தையை வாங்கிக் கொண்டார். மீதி பணத்தை 10 நாட்களுக்குள் தருவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆனால், 20 நாட்களுக்கு மேல் ஆகியும் உறுதியளித்தபடி முபாரக் பணத்தை தராததால், கணவருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற கமலா, தனது குழந்தையை முபாரக் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார்.
பொலிஸார் முபாராக்கிடம் விசாரித்த போது, நடந்த சம்பவம் அனைத்தையும் கூறிய அவர், நாங்கள் குழந்தையுடன் இவ்வளவு நாள் பாசமாக இருந்து விட்டோம். எங்களிடம் இருந்து அவனை பிரித்து விடாதீர்கள் என்று பொலிஸாரிடம் கெஞ்சினார்.
எனினும், சட்டப்படி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார் கமலாவின் கணவர் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டதால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்-
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றுகாலை நல்லூரிற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தின்போதே உழவு இயந்திரத்தில் சென்ற 20 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.
எனினும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே உழவு இயந்திரம் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger