பொது பல சேனா அமைக்கவுள்ள முஸ்லிம் பிரிவில் அஸ்வர், காதர் இணைய முயற்சி? ஹசன் அலி சந்தேகம்!



Azwer MP
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி தங்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தைரியமில்லை என்றால் நமக்காகப் பேசுகின்ற சகோதர இனத் தலைவர்களின் உரைகளையாவது குறுக்கீடு செய்யாமல் மௌனமாக இருக்க வேண்டியவர்கள், அவர்களை பேச விடாது குழுப்பத்தை ஏற்படுத்துவது நாகரிகமான செயலல்ல என்று ஐ.தே.க.வின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்றைய அரசாங்கத்தில் பல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி கதைப்பதற்கு எவருமில்லை.
முஸ்லிம்களின் பிரச்சினைகளில் பொறுமையாக இருக்குமாறு அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆலோசனைகளை சொல்லுகின்றார்கள்.
ஆனால், அவர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களைப் பற்றி பேசாது மௌனமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தலைவர்கள் அரசாங்கத்துடனும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுதல் வேண்டும். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாது இருக்க முடியாது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சகோதர இனத்து மக்களின் பிரதிநிதிகள் கதைக்கும் போது, அவர்களுக்கு ஆளுந் தரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது அவர்களின் நிலைப்பாடு பற்றி முஸ்லிம்களிலிடையே பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய போது அவருக்கு இடையூறுகளை எற்படுத்தினார்கள்.
அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிய போது மேற்படி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இடையூறுகளை எற்படுத்தி இருந்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
முஸ்லிம்களைப் பற்றி தங்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தைரியமில்லை. இந்த சோம்பறித்தனத்தில் ஆளுந் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருக்கின்ற போது, சகோதர இனத்து தலைவர்கள் பேசுகின்ற போது மௌனமாக இருக்க வேண்டியவர்கள், அவர்களை பேசவிடாது குழுப்பத்தை ஏற்படுத்துவது நாகரிகமான செயலல்ல.
பொது பல சேன தமது அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றினை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த முஸ்லிம் பிரிவில் இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பொது பல சேன தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசுகின்றவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி பொது பல சேனவினால் உருவாக்கப்பட இருக்கின்ற முஸ்லிம்  பிரிவில் அங்கத்துவம் வகிப்பதற்கு ஆளுந்தரப்பில் உள்ள மேற்படி இரு  எம்.பிக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இவர்களுக்கும் அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமூகத்தைப் பற்றி அக்கரை இல்லை. தங்களின் சுய இலாபத்திற்காகவே அரசாங்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவர்களின் இத்தகைய செயல்களைப் பற்றி முஸ்லிம்கள் கேள்விகளை கேட்க வேண்டும். கேள்விகள் கேட்காது இருப்பதனால், நாம் என்ன செய்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு பொதுக் கூட்டம் போட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடுமென்று எண்ணியுள்ளார்கள். இவர்களின் இந்த சிந்தனைகள் தப்பானது என்று காட்டுவதற்கும் எங்களை இனி ஏமாற்ற முடியாதென்று சொல்லுவதற்கும் ஆளுந்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விகளை கேட்க வேண்டும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger