இலங்கையில் நடக்கும் காமல்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்தியப் பிரதமரே முடிவு செய்து அறிவிப்பார் என்று இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இருந்தபோதிலும், இந்தியவெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் தான் அதில் கலந்துகொள்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸுடன், இந்திய அமைச்சர் சல்மான் குர்சித்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குர்ஷித் அவர்கள், அங்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களுடன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கொழும்பில் நடத்தினார்.
அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கில் நடந்த தேர்தல்கள் அங்குள்ள மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலமும், தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களை மேம்படுத்துவதன் மூலமும் ஒரு அரசியல் தீர்வையும், தேசிய நல்லிணக்கத்தையும் இலங்கை விரைவாகக் காணவேணும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
இரு நாட்டு மீனவர் இடையேயான விவகாரத்தைப் பொறுத்தவரை இரு நாட்டு மீனவர் சமூகங்களும் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சம்பூரில் அனல் மின்நிலையத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும், இலங்கையில் மும்மொழி தேசிய திட்டம் ஒன்றுக்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் மற்றும் ரயில் பாதை அமைப்புத் திட்டம் ஆகியவற்றை தான் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment