மோடி பிரதமர் பதவிக்கு தகுதி உடையவரா? - மனசாட்சி உள்ளவர்கள் ஒருமுறை இந்த கட்டுரையை படித்து பாருங்கள்




ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்துஎன்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்துஅவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19
பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்இந்து முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டுஅதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோஇன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள் தான் கவலைப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று உள்ளார் என்ற வெறும் மாய கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ததியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமிபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என்பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger