ஏற்றுமதித் தடையில் இருந்து தப்பிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது சிறிலங்கா




ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தடையில் இருந்து தப்பிப்பதற்காக சிறிலங்கா பல்வேறு வாக்குறுதிகளை வழங்க முன்வந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக மீன்பிடிச் சட்டங்களுக்கு முரணான வகையில், சிறிலங்கா மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் சிறிலங்கா மீது மீன் ஏற்றுமதித் தடைகளை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே அனைத்துலக சட்டங்களை மீறி மீன்பிடித்தலில் ஈடுபடுவது தொடர்பான குற்றச்சாட்டில், சிறிலங்காவுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்த நிலையில், இம்முறை ஏற்றுமதி தடைவிதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 5 வீதமாக உள்ள மீன் ஏற்றுமதி கடுமைமையாகப் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்துலக சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மீன்பிடித்தலை மேற்கொள்வது குறித்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்க சிறிலங்கா முன்வந்துள்ளதாக அறியப்படுகிறது.
அனைத்துலக சட்ட நடைமுறைகளை மீறும் மீனவர்களுக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிப்பது, மீனவளங்களைப் பாதுகாப்பது, உள்ளூர் மீன்பிடிக் கலங்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த வாக்குறுதிகளை சிறிலங்கா வழங்கியுள்ளது.
சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான குழு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் இருந்து மீன் இறக்குமதி செய்யும் பிரதான நாடுகளான, பிரித்தானியா, இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகியவற்றில், முக்கியமான நான்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger