ஈரான் தூதர் கைது: காரணம் வெளியாகாததால் சர்ச்சை / ரூ.10 கோடி லஞ்சம் பெற்ற சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை / சீன நிதியுதவியில் புதிய நீர்மின் நிலையம்


world_newsஈரான் தூதர் கைது: காரணம் வெளியாகாததால் சர்ச்சை-
ஈரான் நாட்டின் ஐ.நா. சபை தூதராக பணியாற்றுபவர் பக்ஹர் அசாடி (61). இவர் 8 வளரும் நாடுகளின் குழுவிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அவர் திடீரென்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
மேலும் அவர் எங்கு? எதற்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் எதுவும் வெளியிடப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தூதர் அசாடி கைது விவகாரம் பற்றி ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அலி அக்பர் சலே கருத்து தெரிவிக்கையில், இது தவறான புரிந்து கொள்ளுதல் அடிப்படையில் நடந்து விட்டது என்றார்.
ஆனால் அவரை யார் கைது செய்தார்கள்? என்பதற்கு மந்திரி பதில் தரவில்லை.
ரூ.10 கோடி லஞ்சம் பெற்ற சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை-
சீனாவின் புதிய அதிபராக ஜீ ஜின்பிங் பதவி ஏற்ற பிறகு ஊழல், லஞ்சத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள ஷான்டோங் மாகாணத்தில் துணை கவர்னராக பதவி வகித்த ஹூயாங் ஹெங் என்பவர் ரூ.10 கோடி (2 மில்லியன் டாலர்) லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
சீன நிதியுதவியில் புதிய நீர்மின் நிலையம்-
மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் முக்கிய திட்டமாக தேசிய மின்விநியோக இணைப்பிற்கு 35 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் ‘ப்ரோட்லண்ட்ஸ்’ நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை உடனடியாக நிர்மாணிக்கவுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
சீன நிதியுதவியுடன் 82 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி மின் உற்பத்தி நிலையத்திற்கான பிரதேசத்தை நேற்றுமுன்தினம் பார்வையிட்டுள்ள அமைச்சர், இந்த மின்சார உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் கித்துல்கல பிரதேசத்தில் மேற்படி நீர்மின் திட்டத்திற்கான வாய்க்கால், அமைக்கப்படவுள்ளதுடன் மின் உற்பத்தி நிலையம் எட்டி யாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
களனிகங்கையைப் பிரதானமாகக் கொண்டு அமைக்கப்படும் இந்த நீர் மின்திட்டத்திற்கென 114 மீற்றர் நீளமும் 24 மீற்றர் உயிரமும் கொண்ட நீர் வாய்க்கால் நிர்மாணிக்கப்பட்டு 3.5 கிலோ மீற்றர் நீளமான சுரங்க வழியினூடாக நீர் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
82 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் மேற்படி நீர்மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. சீன அரசாங்கம் இதற்கான 85 வீத நிதியை கடனாக வழங்குவதுடன் தேசிய ரீதியில் ஹட்டன் நெஷனல் வங்கி 15 வீத நிதியினை வழங்கவுள்ளது.
சீன கடன் உதவிக்கான உடன்படிக்கையொன்று சீன ஐ.சீ.பீ.ஏ.வங்கியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது என மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger