வடமத்திய மாகாணப் பெண்களுக்கு மாப்பிள்ளை கொடுப்பதற்கு அஞ்சுகின்றனர்: காரணம் கூறும் ஐ.தே.க.
வடமத்திய மாகாணப் பெண்களுக்கு ஏனைய மாகாணங்களில் உள்ளோர் மாப்பிள்ளை கொடுப்பதற்கு அஞ்சுகின்றனர். ஏனென்றால், அந்தளவுக்கு அங்கு சிறுநீரக நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. பி. ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவரையில் வடமத்திய மாகாணத்தில் 1,96,000 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நான்கு சட்டமூல திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பி. ஹரிசன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மனிதன் உலகில் பிறப்பதையும் இவ் அரசாங்கம் தடுத்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் பதிவுக் கட்டணத்தை அதிகரித்ததன் மூலம் இதனை செய்துள்ளது.
விவாகப் பதிவுக் கட்டணம் 5,200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது போன்று மனிதன் இறுதிமூச்சு விடும் மரணத்தைப் பதிவுசெய்யும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சத்தியக்கடதாசிக்கான கட்டணம் 25 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாதாரண மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு சத்தியக்கடதாசி கட்டாயமாகும்.
எனவே, இவ்வாறு அனைத்து கட்டணங்களையும் அதிகரித்துள்ள அரசாங்கம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கட்டணங்களை அதிகரிக்கவில்லை எனக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? ஒருபுறம் மின் கட்டணத்தை அதிகரித்து மறுபுறம் பதிவுக் கட்டணங்களை அதிகரித்து மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. யுத்த களத்தை விட இந்நோயினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கின்றனர்.
தினமும் 4 பேர் உயிரிழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய வைத்திய நிபுணர்கள் சிறுநீரக நோய்களை தடுப்பது தொடர்பில் வெளியிட்ட அறிக்கைகளின் பரிந்துரைகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
வடமத்திய மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் இம் மக்கள் ஒதுக்கப்படுகின்றனர்? அவர்கள் இந்நாட்டு ம்ககள் இல்லையா.
இம் மாகாணத்தில் விளையும் அரிசி மற்றும் பயிர்களில் மரக்கறி, காய்கறிகளில் ஆசனிக் மற்றும் சயனைட் அடங்கியுள்ளன.
அங்கு பாவிக்கபபடும் உர வகைகளின் ஊடாகவே உணவுகளில் மேற்கண்ட நச்சுப் பதார்த்தங்கள் உள்ளீர்ககப்படுகின்றன.
சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தில் 1,96,000 பேர்சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 5 வருடங்களில் இவர்கள் அனைவரும் உயிரிழந்து விடுவார்கள்.
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கைய மாற்றுவதற்கு நாட்டில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். எனவே, வடமத்திய மாகாண மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இன்று வடமத்திய மாகாணத்தில் பெண்களுக்கு ஏனைய மாகாணங்களில் உள்ளோர் மாப்பிள்ளை கொடுப்பதற்குத் தயங்குகின்றனர்.
ஏனென்றால், மணமகள் சிறுநீரகநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அது மணமகனையும் குடும்ப வாழ்க்கையையும் பாதித்துவிடுமென்ற அச்சத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment