பேஸ்புக் காதலால் வாழ்க்கையைத் தொலைத்த மாணவி



பேஸ்புக் சமூக வலைத் தளம் மூலம், மாணவியிடம் நட்பு ஏற்படுத்தி, அவரை சீரழித்த வாலிபரை, பொலிசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.ஏ., மாணவி ஒருவர், படிப்பு தொடர்பாக, சென்னை வந்துள்ளார். தேனாம்பேட்டையில் தங்கியிருந்த அவர், அங்குள்ள கணினி மையத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 

அப்போது, "பேஸ்புக்´கை சேட் செய்தபோது, ஒரு வாலிபரின் நட்பு கிடைத்துள்ளது. அந்த வாலிபர், கணினி மைய உரிமையாளரின், நண்பர். இருவரும், "பேஸ்புக்´ மூலமாகவே, தகவல்களை பரிமாறி கொண்டனர். சில நாட்களில், வாலிபர் மீது மாணவிக்கு நம்பிக்கை உருவாகி உள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், மாணவியை, அந்த வாலிபர், ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அந்த ஆட்டோ, அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டடத்திற்கு மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். 

இதற்கு உடந்தையாக, கணினி மைய உரிமையாளரும் இருந்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து மாணவியை, ஆபாச படம் எடுத்துள்ளனர். 

மாணவி கூச்சல் போடவே, "அமைதியாக வெளியே சென்றுவிடு. இல்லையென்றால், என் நண்பர்களை வரச்சொல்லி, அவர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன்´ என, வாலிபர் மிரட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், மாணவி, தன்னை சீரழித்த அந்த வாலிபரிடம் நியாயம் கேட்டுள்ளார். 

அப்போது, திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி, வாலிபர் சமாளித்துள்ளார். இதை அடுத்து, சில தினங்கள் கழித்து, மாணவியும், அவரது உறவினர்களும், வாலிபரை தேடி சென்றனர். அப்போது தான், அவருக்கு ஏற்கனவே, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது தெரிந்தது. 

இதை அடுத்து, மாணவி, கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் செய்தார். இதை தொடர்ந்து, பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து உளவியல் நிபுணர் ஒருவர் கூறியதாவது: 

அறிவுசார் விஷயங்களுக்காக, பயன்படுத்தப்படும் சமூக வலை தளங்கள், தற்போது, சமூக சீரழிவுக்கான காரணிகளில் ஒன்றாகி விட்டது. நண்பர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, நல்லவர்களை போல நடித்து, பெண்களை சீரழிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பெரும்பாலான பெண்கள், வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி, புகார் கொடுப்பதில்லை. சில பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

சமூக வலை தளங்களை பயன்படுத்தும்போது, பெண்கள், கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger