23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நவம்பர் 15 முதல் 17 வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளது
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று காமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற காமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில், மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என்று கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி கூறினார்.
'ஆனால் மற்ற விடயங்கள் தொடர்பான விவாதத்தின் போது பல்வேறு நாடுகளைப் பற்றி ஒளிவுமறைவு இன்றி விவாதித்தோம். அச் சமயத்தில் இலங்கை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆனால் அது குறித்து நாங்கள் வெளியே பகிரங்கமாக கூற முடியாது. காமன்வெல்த் உச்சிமாநாட்டைப் பொறுத்தவரை – அம்மாநாடு எங்கு நடக்கும் என்பதை காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் இதுகுறித்து ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். அந்த முடிவு தொடர்கிறது. இது குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் மீள் பரிசீலனை செய்ய முடியாது' என்றும் அவர் கூறினார்.
காமன்வெல்த் அலுவலகம் முன்பாக இன்று நடந்த ஆர்ப்பாட்டம்
இதேவேளை, போருக்கு பிந்தைய இலங்கை பல முன்னேற்றங்களை கண்டிருப்பதாக காமன்வெலத் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.
2013-ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று காமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது.
காமன்வெல்த் மாநாடு நடத்தப்படும் இடத்தை இலங்கையிலிருந்து மாற்றுமாறு வலியுறுத்தி லண்டன் தமிழர்கள் காமன்வெல்த் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23-வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 முதல் 17-ம் திகதி வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளது.

Post a Comment