"சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்துவருவதால் வட மாகாணசபைத் தேர்தலை அரசு நடத்தியே ஆகவேண்டும். அதிலிருந்து அரசு தப்ப முடியாது. எனவே, வடக்குத் தேர்தலை நடத்த வேண்டாம் என அமைச்சர் விமல் வீரவன்ஸ போன்ற இனவாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்களின் குப்பைக் கருத்துக்களைத் தூக்கி வீசுங்கள்," என்று ஆவேசத்துடன் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று பத்திரிகை ஆசிரியர்களை கடந்த திங்கட்கிழமை சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
|
இதனையடுத்து நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரவன்ஸ, செப்ரெம்பர் மாதம் வடக்குத் தேர்தலை நடத்துவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளைப் பலப்படுத்தி விடும் எனவும், கூட்டமைப்பினர் 13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கேட்கத் துணிந்து விடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, வட மாகாண சபைத் தேர்தலை அரசு எந்தச் சந்தர்ப்பத்திலும் நடத்தக்கூடாது என்று அடித்துக் கூறியுள்ளார். வடக்குத் தேர்தல் தொடர்பான ஜனாதிபதி மஹிந்த மற்றும் அமைச்சர் விமல் ஆகியோரின் கருத்துக்கள் தொடர்பில் நேற்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தவை வருமாறு:
வடக்கு மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தவேண்டும் என சர்வதேச சமூகம் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றது. எனவே, சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்கவாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். அத்துடன் சர்வதேச மத்தியஸ்த்துடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண முன்வரவேண்டும். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தவேண்டாம் என அமைச்சர் விமல் போன்ற இனவாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றார் சம்பந்தன்.
|
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்துவருவதால் வட மாகாணசபைத் தேர்தலை அரசு நடத்தியே ஆகவேண்டும் - சம்பந்தன்
Labels:
அரசியல் தலைவர்கள்
Post a Comment