ஆட்சியில் இருப்பது முட்டாள் அரசு : ரில்வின் சில்வா


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு அவருக்கு எதிராக பேசும் அரசாங்கத்தின் முட்டாள் தனமான செயற்பாட்டால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை அரசாங்கமே அழைத்தது. அவ்வாறே அவரை எங்கும் போகலாம் எவரையும் சந்திக்கலாம் என்று வாக்குக் கொடுத்ததும் அரசாங்கமே.

இந்நிலையில் அவருடைய வருகையை அடுத்து அவருக்கு எதிராக பேசி நாட்டு மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபடும் அரசின் முட்டாள் தனமான செயற்பாட்டால் எமது நாட்டுக்கு அவதூறு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் பல பொய்களை கூறி நாட்டு மக்களை திசைதிருப்பியது. அவ்வாறே உலக நாடுகள் சிலவற்றையும் திசை திருப்பியது. அந்தவகையிலேயே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில் தற்போது அரசாங்கம் வகையாக மாட்டிக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற 90 வீதமான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். அரசாங்கத்தின் இரட்டை வேடம் தற்போது வெளியில் வர ஆரம்பித்துள்ளது. இந்த அரசாங்கத்திடம் எவ்விதமான கொள்கையும் இல்லை. மாறாக நாட்டுப்பற்று பற்றி பேசும் அரசில் உள்ள அமைச்சர்களின் செயற்பாடுகளே நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி போன்றன பற்றி கூடுதல் கவனம் செலுத்தியிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர், அண்மைக்கால சம்பவங்களான வெலிவேரிய மற்றும் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களையும் புதிய விடயங்களாக தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger