“பிறைக் குழு ஒன்று போதுமானது” மறுப்பிற்கு மறுப்பு


(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர் ஹிஷாம் எம்.ஜ.எஸ்.ஸீ)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறை குழு தொடர்பான தகவலை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் இணையதளம் வாயிலாக அறிவித்தோம். ஜப்னா முஸ்லிம் என்ற இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு தகவலை அறியத் தந்தோம். எமது அறிவிப்பிற்குப் பின்னர் “பிறை குழு ஒன்று போதுமானது” என்ற தலைப்பில் இலங்கைக்கு ஒரு பிறைக் குழுவே போதுமானது என்று எமது கருத்தை விமர்சனம் செய்து ஆக்கமொன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பாக அந்த ஆக்கத்தில் உள்ள அறியாமைகளை சுட்டிக்காட்டும் விதமாக இந்த ஆக்கத்தை பதிவு செய்கிறேன்.

அந்த ஆக்கத்தை எழுதியவர் எம்மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை கொட்டியுள்ளாரே தவிர சமூகத்தின் மீது அக்கறையற்று தவறாக கருத்துக்களை பதிந்துள்ளார்.

இலங்கையில் பிறை பார்ப்பவர்கள் யார் என்ற வரலாறு தெரியாமல் அப்பட்டமாக வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்து இருக்கிறார்.
ஜம்இய்யதுல் உலாமாவுடன் சேர்ந்து பெரிய பள்ளி பிறை குழு பிறை பார்ப்பதாக அப்பட்டமாக புளுகியுள்ளார்.

உண்மையில் இந்தப் பணியை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு முன்னரே பெரிய பள்ளி வாசல் செய்து வருகிறது. பெரிய பள்ளியுடன் தான் ஜம்இய்யத்துல் உலமா இணைந்தார்கள் என்பதை ரிஸ்வி முப்தி அவர்களே வானொலியில் பேசும் போது குறிப்பிட்டிருந்தார்கள். ஜம்மியத்துல் உலமா மீது உள்ள அளவு கடந்த நம்பிக்கையில் ஜம்மியத்துல் உலமா என்ன சேவை செய்கிறார்கள் என்ற தகவல் கூட இவருக்குத் தெரியவில்லை.

அடுத்து, இவ்வளவு காலமும் இவர்கள் தியாகத்துடன் பிறை பார்த்தால் அந்த பணியை ஜம்மியத்துல் உலமாவைச் சார்ந்தவர்கள் மாத்திரம் தான் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

பல வருடங்களாக இவர்கள் அனைவரும் பிறை பார்க்கிறார்கள் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒருவர் தியாகம் செய்தார் என்பதற்காக குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக நடக்கும் போதும் அதற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்திற்கு மாற்றமான வழியாகும். பல வருடங்கள் இவர்கள் பிறை பார்த்து இருந்தாலும் அவர்களின் நம்பகத்தன்மையை மக்கள் பல வருடங்களுக்கு முன்னரே இழந்து விட்டார்கள். இவர்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு பிறைத்தகவலை மறுக்கக்கூடியவர்கள் என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. இந்தக் கருத்து கடந்த ரமலான் பிறை தீர்மானிப்பதிலும் ஜம்இய்யதுல் உலமா நிரூபித்துவிட்டது.

எனவே, இவர்களின் நம்பகத்தன்மைகளை மக்கள் இழந்து குர்ஆன் சுன்னாவை மாத்திரம் அடிப்படையாக வைத்து மனோ இச்சைக்கு கட்டுப்படாமல் முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு அமைப்புக்கு பிறை குழுவை இலங்கையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவுதான் எமது பிறை குழு. இது இறுதி ரமலானில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எடுத்த முடிவு அல்ல. அதற்கு முன்னரே அமுல் படுத்திக் கொண்டு தான் வருகிறோம். பிறை பார்க்கும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதால் நாம் தனியாக பிறைக் குழு ஒன்றை நடத்தவுள்ளோம் என்ற தகவலை கூட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழுவுடனான சந்திப்பின் போது கடந்த வருடம் அறிவித்தும் உள்ளோம். இந்த வருடம் இன்னும் வீரியமாக அந்த பணியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த குழுவில் சில மாற்றங்களை செய்து மக்களுக்கு அறிவித்தோம். அந்த அறிவிப்பைத்தான் இந்த சகோதரா் பார்த்துவிட்டு இது நேற்று அமைக்கப்பட்ட குழு என்று முடிவு செய்துவிட்டார் போல.

பிறை திர்மானிப்பதில் ஜம்மியத்துல் உலமா குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக நடக்கிறது. அவர்களின் நிபந்தனைகளில் சிலது தவறாக இருக்கிறது என்று அவர்களிடமே சென்று சுட்டிக்காட்டிவிட்டு வந்தோம். எனவே, ஒருவர் பல வருடங்களாக ஒரு பணியை செய்தால் அவர்கள் தான் அந்த பணியைத் தொடரவேண்டும் என்று கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். அப்படி இருப்பின் பெரிய பள்ளிவாசல் பிறை பார்த்து அதை மக்களுக்கு அறிவிக்கும் பணியை ஆரம்பத்தில் செய்து கொண்டு இருக்கும் போது ஜம்மியத்துல் உலமா எதற்கு அவர்களுடன் இணைய வேண்டும்? அந்தப் பணியை அவர்கள் தான் ஆரம்பத்தில் இருந்து செய்தார்கள். அவர்கள் தான் இறுதி வரைக்கும் செய்யவேண்டும் என்று விட்டுவிட வேண்டியது தானே. எனவே, இவருடைய ஆரம்ப வாதமே அடிப்படையிலேயே தவறானதாகும்.

அடுத்து, நாம் சர்வதேசப்பிறையை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் என்று ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முனைகிறார்.எமது பிறைக் குழு பற்றிய இணையதள அறிவிப்பில் நாம் சர்வதேசப் பிறைக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளோம்.

“திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னாவின் படியும் ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் வெற்றுக் கண்களால் பிறையை பார்த்து நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டும் எனும் அடிப்படையில் ஜமாஅத் பிறை விவகாரத்தை தீர்மானிக்கும்.”

எம்மீது உள்ள காழ்புணர்வினால் நாம் என்ன சொல்கிறோம் என்பதைக்கூட கவணிக்காமல் எம்மை விமர்சித்துள்ளமை இவரது அறியாமையை மேலும் தோல் உரித்துக்காட்டுகிறது.

ஸ்ரீலங்கா தவ்ஹீ்த் ஜமாஅத் சர்வதேசப் பிறையை ஏற்றுக் கொள்ளகூடியவர்கள் அல்ல. நபி வழியின் அடிப்படையில் தத்தமது பகுதியில் பிறை பார்க்கவேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் பார்க்கும் பிறைத்தகவலை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள். இன்னும் சொல்வதாக இருந்தால் சர்வதேசப்பிறையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும், அது வழிகேடு என்றும் யாருக்கு மத்தியிலும் விவாதம் செய்து நிரூபிக்கத்தயாராக இலங்கையில் இருக்கும் ஒரே அமைப்பு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரம் தான். ஜம்மியத்துல் உலமா தங்களது நிலைப்பாட்டைக்கூட குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் நிரூபிக்க திராணி அற்றவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்து நாம் ஜம்மியத்துல் உலமாவை தலைமையாக ஏற்றுக் கொள்ளாமல் அவர்களின் கிண்ணியா கிளையின் அறிவிப்பபை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா? நளீமிகளை திட்டிக்கொண்டு ஜாபிர் நளீமியை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று ஒரு அறிவீனமான வாதத்தை வைத்து உள்ளார். நாம் ஒரு போது ஜம்மியத்துல் உலமாவை தலைமையாக ஏற்றுக் கொண்டதும் இல்லை. ஏற்றுக் கொள்ளவும் மட்டோம். ஒருவர் தவறு செய்யும் போது அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் சுட்டிக்காட்டவேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம்இன்றி எடுத்து சொல்லக்கூடிய அமைப்புதான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத். அந்த அடிப்படையில் தான் ஜம்மியத்துல் உலமாவிற்கு சுட்டிக்காட்டப்பட்டதே தவிர அவர்களை தலைமையாக ஏற்றுக் கொண்டு அல்ல என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

நாம் நளீமிகளை திட்டுவதாகவும் மக்களை வழிகேடர்கள் என்று சொல்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். எமக்கும் நளீமிகளுக்கும் எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை. மார்க்கத்திற்கு முரணாக கருத்துக்களை யார் மக்கள் மத்தியல் முன்வைத்தாலும் அதை விமர்சனம் செய்வோம். வழிகேடான செயல்களை செய்யக்கூடியவர்களை தான் வழிகேடர்கள் என்று சொன்னோமே தவிர அனைவரையும் வழிகேடர்கள் என்று சொல்லவில்லை.

நாம் பிறையை ஏற்றுக் கொண்டு பெருநாள் தினத்தை அறிவித்தது கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் அறிவிப்பை ஏற்று அல்ல. அவர்கள் பெருநாளை அறிவிப்பதற்கு முன்னரே நாம் பெருநாள் தினத்தை அறிவித்துவிட்டோம். கிண்ணியா ஜம்மியத்துல் உலமா அறிவித்தது இரவு 11 மணிக்கும் பிறகு. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இரவு 7 மணிக்கே அறிவித்துவிட்டது.  நாம் பிறை தகவலை ஏற்றுக் கொண்டது குர்ஆன் சுன்னா அடிப்படையில். பிறை பார்த்தவர்களை விசாரித்து அது உண்மை என்று உறுதிப் படுத்தப்பட்ட பின்னர் தான். யாருக்காகவும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் அமைப்பு அல்ல ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறுதி வரைக்கும் மனோ இச்சைக்கு கட்டுப்படாமல் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பிறை பார்க்கும் பணியை சிறப்பாக செய்து வரும்.



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger