கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது / வல்லுறவு கண்டுபிடிக்கப் படவில்லை, வவுனியா ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிப்பு


 

கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது-
திருகோணமலை கிண்ணியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த ஒருவர் சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து சுமார் 9 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த லேகியத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிண்ணியா ஹிஜ்ரா வீதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட சீனக்குடாப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ப் பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.எம். ஜவ்சி தலைமையிலான பொலிஸ் குழுவினரே இதனைக் கைப்பற்றியுள்ளனர்.
சீனக்குடாப் பொலிஸ் நிலையத்தினால் கைப்பற்றப்பட்ட அதிக கூடிய போதைப் பொருள் இது என பொலிசார் தெரிவித்தனர்.
மூதூரிலிருந்தே லேகியம் கொண்டு வரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்டவரின் தந்தையும் இதே தொழிலையே முன்னர் செய்து வந்ததுடன் மூன்று தடவைகள் அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லுறவு கண்டுபிடிக்கப் படவில்லை, வவுனியா ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிப்பு-
காவத்தையில் இருந்து சேனப்பிலவு வரை நடந்த சிறுமி மீதான வன்புணர்வு குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டாளர் என். தேவகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணியில் இடம்பெற்ற சிறுமி மீதான வன்புணர்வு சம்பவத்தைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், யுத்தத்திற்குப் பின்னர் எமது மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
ஏனெனில், இன்று வீட்டில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் சென்றே குடும்பத்தை காக்க வேண்டிய நிலையிருக்கும் போது எமது குழந்தைகளுக்கு பின்னால் இருவரை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டியிருப்பது பாரதூரமான பிரச்சினையாகும்.
இதற்கு ஒரு தரப்பினரை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இதற்கு சரியான வேலைத்திட்டத்தினை அடையாளங் கண்டு எமது மக்களை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுப்பதற்கு எல்லோரும் சேர்ந்து பொது இணக்கப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும்.
அவ்வாறு நாம் செயற்படாவிட்டால் முள்ளிவாய்க்காலில் இறந்த அத்தனை மக்களுக்கும் துரோகம் செய்யவதாக இருக்கும்.
இன்று காட்டிக் கொடுப்பவர்களுக்கும் கூட்டிக் கொடுப்பவர்களுக்கும் மத்தியில் மக்கள் ஒன்றினைந்து பேராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
இதேநேரம் காவத்தையில் இருந்து சேனப்பிரிவு வரை நடந்த சிறுமிகள் மீதான வன்புணர்வு குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, காவல் துறையினர் மனிதாபிமானத்துடன் மக்களின் சேவையாளன் என்ற வகையில் அதிகார வர்க்கத்தை விடுத்து தமது கடமையை ஏழை மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் சரியாக செய்ய வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger