(A.J.M.மக்தூம்)
மியன்மாரில் கடந்த பன்னிரண்டு மாதங்களாக
கொடிய மோதல்கள் இடம்பெற்று வரும் கொலைக் காலமாக காட்சி தருகிறது என பிரஸ் TV செய்தி
வெளியிட்டுள்ளது.
IHH மனிதநேய நிவாரண அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையொன்றின் படி பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் கிராமங்களை பௌத்த தீவிர வாதிகள்
தீ வைத்து அழித்துள்ளதுடன், ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை மிருகத் தனமாக கொன்று
குவித்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வாழும்
நிர்கதி நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
நாட்டில் இருந்து தப்பி செல்ல முடிந்தவர்கள்
பங்களாதேஷ் அகதி முகாமில் இருந்து கொண்டு IHH போன்ற
மனித உரிமைகள் அமைப்பு வழங்கும் உதவிகளின் மூலம் உயிர் வாழ முயற்சி செய்கின்றனர்.
சமீபத்தில் அராகான் மாநிலத்தின் 12 வெவ்வேறு
நகரங்களில் வன்முறை வியாபித்து இருந்த போதிலும் மூன்று நகரங்களில் மாத்திரமே அரச
சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இதனால்
கொலை செய்யப் பட்டுள்ள, சித்திரவதைக்கு ஆளான மற்றும் இடம்பெயர்ந்துள்ள
முஸ்லிம்களின் சரியான எண்ணிக்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியாமல்
போய்விட்டது என்பதையும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக
கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள படுகொலை சம்பவங்கள் நம்ப முடியாததாகும் எனவும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பல
முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டும், உயிருடன்
புதைக்கப் பட்டுமுள்ள அதே வேளையில் பலர் இறக்கும் வரை கொடூரமாக சித்திரவதை செய்யப்
பட்டுமுள்ளனர். மேலும் முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்
பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
மனிதாபிமான நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும்
பலர் சர்வதேச சமூகத்தின் செயலற்ற தன்மையை முறையிடுகின்றனர்.
அதே வேலை ரோஹிங்கியா சிறுபான்மை
முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு பிரச்சாரத்தை மியன்மாரின் மூத்த
அதிகாரிகளே திட்டமிட்டு தூண்டிவிடுகின்றனர் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இது வரைக்கும் வெளியாகியுள்ள புகைப்படங்கள்
அங்கு இடம்பெற்றுள்ள அராஜகத்தை மிகத் தெளிவாகவே படம் பிடித்து காட்டுகின்றன; மியன்மாரின்
அராகான் மாநிலத்தை மாபெரும் பேரழிவு மண்டலமாகவே கருத வேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக 2012 ல் அங்கே அரங்கேற்றப் பட்ட இரத்த
வெறிப்பிடித்த தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களை காவு
கொண்டதோடு, ஒரிலட்சத்தி 25 ஆயிரத்திற்கும்
அதிகமான முஸ்லிம்களை அவர்களின் இருப்பிடங்களை இழக்கும் நிலைக்கு
தள்ளிவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

Post a Comment