வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களது உறவில் விரிசலை ஏற்படுத்த சதி!



முல்லைத்தீவு, முள்ளியாவளை பிரதேசத்தில் இடம் பெற்ற தீ வைப்பு சம்பவத்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் எந்த வித தொடர்புகளுமில்லை என்றும், இது ஒரு சில விஷமிகளின் நன்கு திட்டமிடப்பட்ட செயலென்றே கருத முடிகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார். 

இது வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களது உறவில் விரிசலை எற்படுத்தும் சக்திகளின் செயல் என்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் பணிகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

முல்லைத்தீவு முள்ளியாவலையில் தமிழ் மக்களின் தற்காலிக கொட்டில்கள் மீது இடம் பெற்றதாக வெளியாகிய தீ வைப்பு செய்தியினையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முல்லைத்தீவு, வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம்களுடன் உறவுடன் வாழ்ந்து வருகின்றனர். 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, கவலைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். அவ்வாறு நெருக்கத்துடனும், புரிந்துணர்வுடனும் வாழும் இரு சமூகங்களையும் கூறுபோட்டு அதன் மூலம் அரசியல் லாபங்களை பெற்று கொள்ள சில சக்திகள் முயற்சி செய்வதினை தெளிவான ஆதராமாக இந்த தீ வைப்பு சம்பவத்தை காணமுடிகின்றது. 

அண்மைக் காலமாக வடக்கில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கெதிராக பல்வேறு சக்திகள் சூழ்ச்சிகளை செய்வதும்,இன ரீதியான விமர்சனங்களை முன்னெடுத்தவருவதும் தொடரான சம்பவமாக இருந்து வருகின்றது. முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள நெருக்கத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பல்வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதை யாவரும் நன்கு அறிவார்கள். 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வருகின்ற போது அவர்களை தடுத்து வெளி மாவட்ட மக்கள் என்று பிரித்து பிரிவிணைக்கு தூபமிடும் வேலைகளை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். முள்ளியவலையில் காணி உறுதியின்றி மேற்குறிப்பிட்ட காணியில் இருக்கும் தமிழ் சகோதர மக்களுக்கும் அவற்றை பெற்றுக் கொடுக்க முதலாவதாக அவர்களுக்கான காணி பதவு விபரங்கள் பெறப்பட்டது. அதன் பிறகே மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கான காணிபதிவு விபரங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அதனை பிழையாக காட்டி இனவாத சிந்தணைகளை வித்திட்டு வருகின்றனர். 

புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயக மண்ணில் மீள்குடியேறவருகின்றதை ஏதாவது வழிகளில் தடுப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மேலும் சில இனவாத அரசியல் கட்சிகள் இயங்க ஆரம்பித்துள்ளது இந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்னணியினை நோக்கும் போது தெளிவாக புலப்படுகின்றது. 

இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழ்-முஸ்லிம் மக்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி பிரதேசத்தில் குழப்பத்தை தோற்றுவிக்க மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என்பதால் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதே வேளை இந்த தீ வைப்பு சம்பவத்துடன் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடுவதன் பிண்ணனியானது, முஸ்லிம்களை மீள்குடியேற விடாமல் செய்யும் ஒன்று என்பதை புரிந்த கொள்ள முடிகின்றது. 

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்ற பாகுபாடுகளின்றி பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனை இதனுடன் சம்பந்தப்படுத்துவது அபாண்டம் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், இனவாத சக்திகளின் சூழ்ச்சிகளில் விழுந்துவிட வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட மக்களை கேட்டுள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger