சிந்திப்பார்களா பெற்றோர்கள்?
சமீபத்தில் இங்கிலாந்தில் தொடக்கப்
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவுகள்
அதிர்ச்சியை வரவழைப்பதாக அமைந்துள்ளது. ஆம்! இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளிகளில்
படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக அந்த
புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளி சிறார்கள்
3000 பேர் இன்டர்நெட்டில் ஆபாசப் படம்
பார்த்தும், ஆபாச நிகழ்ச்சிகளைப் பார்த்தும்
சிக்கி பள்ளிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை. எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ்
வயதிலும், அதற்கு முந்தைய வயதிலும் பெருமளவிலான
சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
தினசரி 15 பேர் :
இங்கிலாந்து பள்ளிகளைப் பொறுத்தவரை
சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 சிறார்கள், செக்ஸ் தொடர்பான புகார்களில் சிக்கி பள்ளிகளை விட்டு
நீக்கப்படுகிறார்கள்.
15 பேரில் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர் :
இந்த 15 பேரில் குறைந்தது ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவராக
இருக்கிறார்.
ஆண்டுதோறும் 3000 பேர் :
செக்ஸ் சேட்டைகள், பாலியல் அத்துமீறல்கள், தொந்தரவு புகார்கள் காரணமாக 3000 சிறார்கள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்கள்.
சிறார்களைப் பொறுத்தவரை அவர்கள்
எஸ்.எம்.எஸ்.மூலம்தான் பெருமளவில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். கூடப்
படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ். அனுப்புவது, ஆபாச படங்களை எம்.எம்.எஸ். அனுப்புவது ஆகியவைதான் அவர்கள்
செய்யும் பெரிய சேட்டைகளாகும்.
சிறார்களில் பெரும்பாலானோர் ஆபாசப்
பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உடையவர்களாகவும் உள்ளனர்.
அந்த ஆபாசப் புத்தகங்கள் மற்றும்
பத்திரிக்கைகளில் உள்ள படங்களைக் கத்தரித்து பென்சில் பாக்ஸில் வைப்பது, நோட்டுப் புத்தகத்தில் ஒட்டுவது ஆகிய பழக்கங்களில்
ஈடுபடுகின்றனர்.
மேற்கண்டவாறு அந்த ஆய்வு முடிவு
தெரிவிக்கின்றது.
இங்கிலாந்தில்தான் இந்த நிலைமை; நம்ம நாட்டில் இந்தப் பிரச்சனை இல்லை என்று யாரும் தப்புக்
கணக்கு போட்டுவிடக்கூடாது.
சமீபத்தில் தேனியில் நடந்த சம்பவத்தை
சிந்தித்தால் இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் இந்த விஷயத்தில்
பெரிய வேறுபாடு இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இதோ அந்த செய்தி :
வாடகை மொபைலில் ஆபாசப் படம் -
மாணவர்களின் விபரீதப் பழக்கம்”
தேனி: தேனியில் நாள் வாடகைக்கு மொபைல்
போன் வாங்கி, அதில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம், பள்ளி மாணவர்களிடம் பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் பல பள்ளிகளில், ஆபாசப் படத்துடன் கூடிய வாடகை மொபைல் போனுடன் மாணவர்கள்
வலம் வருகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் இது கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவனிடம் விலை உயர்ந்த மொபைல் போன் இருந்தது. ஏழ்மையில் இருக்கும்
மாணவனிடம், எப்படி விலை உயர்ந்த மொபைல் போன்
இருக்கும், என ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தார்.
அப்போது, அதே மொபைல் போன் வேறு வகுப்பில் உள்ள மற்றொரு மாணவரிடம்
இருந்தது. அதை பறிமுதல் செய்த ஆசிரியர், மாணவரிடம் அன்பாக விசாரித்து, சோதனை செய்தபோது, பல ஆபாச வீடியோ படங்கள் இருந்தன. இந்த மொபைல் போனை ஐ.டி.ஐ., மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. இதை மாணவர்கள் போட்டி
போட்டு, நாள் வாடகைக்கு வாங்கி படம் பார்த்து வருவது தெரிந்தது.
இந்தக் கலாச்சாரம் அனைத்து
மாவட்டங்களிலும் உள்ளது என்பது கூடுதல் தகவல். மாணவர்களின் இந்த மொபைல் போன்
ஆபாசப் படம் பார்க்கும் மோகத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணித்து, அவர்களை விளையாட்டு, படிப்பு என நல்வழிப்படுத்த வேண்டும். மொபைல் போனில் ஆபாசப் படம் பதிந்து
கொடுக்கும், கும்பல் மீது போலீசார் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
படிக்கக் கூடிய பள்ளி மாணவர்கள்
வாடகைக்கு செல்ஃபோன் வாங்கி அதில் ஆபாசப் படம் பார்க்கக்கூடிய அளவிற்கு நிலைமை
உள்ளதென்றால் பெற்றோர்கள் இதை ஒரு கனம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமா? கடந்த 2011 - 2012க்கான கல்வியாண்டின் போது
இராமநாதபுரம் பரமக்குடியில் முதன்மைக்கல்வி அதிகாரி பள்ளிக்கூட ஆய்விற்குச்
செல்கின்றார். அங்கு நடந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் குறித்து செய்தித்தாள்களில்
வெளியான செய்தியை பெற்றோர்கள் கொஞ்சம் கவனியுங்கள் :
பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம் : பாடப் புத்தகங்களுக்குள் காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!
பரமக்குடி: அரசுப் பள்ளிக்கூடங்களில்
சோதனை நடத்தச் சென்ற முதன்மை கல்வி அதிகாரி, மாணவ, மாணவியரின் பாடப் புத்தகங்களுக்குள்
ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், பைகளில் செல்போன்கள் ஆகியவை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தார். எல்லாம் 10,11, 12வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்.
நல்லவர்களாக இருக்க கிடைக்கும்
வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாம் எப்படி
திடமாக இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் நிலை தடுமாறாமல் வாழ்க்கைப் பாதையில்
அடியெடுத்து வைக்க முடியும். இன்றைய மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் மீது பல குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன. இந்த
வயதிலேயே காதலிக்கிறார்கள், இந்த வயதிலேயே செல்போனும் கையுமாக
விடாமல் பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள். இதேபோல ராமநாதபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது சில புகார்கள் வந்தன.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பரமக்குடி வந்தார். அங்கு அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் முதலில் சோதனையில் இறங்கினார். மேல்நிலை வகுப்புகளுக்குச்
சென்று மாணவர்களின் பைகளை சோதனையிட்டார். அப்போது செல்போன்கள் பல சிக்கின. அதை விட
அதிர்ச்சியாக ஆபாசப் புத்தகங்கள் எக்கச்சக்கமாக சிக்கின. பலர் தங்களது பைகளில்
இருந்த இதுபோன்ற குப்பைகளை தூக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அதைப் பார்த்த
அதிகாரி அவற்றையும் கைப்பற்றினார்.
பின்னர் பைகளில் செல்போன், ஆபாசப் புத்தகம் உள்ளிட்டவற்றை வைத்திருந்தவர்களைக்
கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட மாணவர்கள்
அதிர்ச்சி அடைந்து அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி அழுதனர். இதையடுத்து
அவர்களை மன்னித்த அதிகாரி, மாணவர்களுக்கு புத்திமதி கூறி இனிமேல்
ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பார்த்திபனூரிலும் இதே நிலைதான் :
அடுத்து பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூரில் உள்ள அரசு
மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றார் ராதாகிருஷ்ணன். அங்கும் சோதனை நடத்தினார். அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சியைத் தரும் வகையில் மாணவிகள்
பலர் காதல் கடிதங்களை பைகளில் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இங்கும்
மாணவ, மாணவியர்களுக்கு கடும் எச்சரிக்கை கலந்த அறிவுரையைக்
கூறினார் ராதாகிருஷ்ணன். இந்த சோதனை குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தஙக்ளது பிள்ளைகள் என்ன
செய்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பது
குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த வேண்டியது
பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர
வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும் என்றார்.
மேற்கண்ட செய்திகள் நமக்குக்
கூறுவதென்ன?
வீட்டிலுள்ள பெற்றொர்கள் தங்களது
பிள்ளைகளை கவனிக்கத் தவறுதுதான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது.
இப்படி தங்களது பெற்றோர்களால்
கவனிப்பாரற்று விடப்படும் பிள்ளைகள் மூன்று வகைகளில் சீரழியக்கூடிய நிலை ஏற்படுவதை
நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
1.ஆபாச படங்கள், இன்டர் நெட் மூலம் வழிகேடு, மது, மாது, போதை, புகையிலை, பான்பராக் என்று வழிகெடுவது ஒரு பக்கம்
2.வன்முறை, சமூக விரோதச் செயல்கள் என்று செல்வது
ஒரு பக்கம்
3.இஸ்லாமிய நெறிமுறைப்படி வளர்க்கப்பட வேண்டிய, வார்த்தெடுக்கப்பட வேண்டிய பிள்ளைகள் இணைவைத்தலின் பக்கம்
போய் நிரந்தர நரகத்திற்குரியவர்களாக மாறக்கூடிய அவலம் ஒரு பக்கம்
மேற்கண்ட மூன்று வகையான
வழிகேடுகளிலிருந்து நமது பிள்ளைகளை காக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள் தங்களது
பிள்ளைகளை கவனித்து பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்
இந்த உலகத்திலும் இழப்பை அடைவதுடன், மறுமையிலும் இழப்படைய நேரிடும் என்பதை
அறிவுரையாக சொல்லிக் கொள்கின்றோம்.
தடுக்க வழி என்ன? :
இதுபோன்ற மோசமான செயல்களிலிருந்து
நமது பிள்ளைகளை காக்க வேண்டுமென்றால் அவர்களை சீரழிக்கக் கூடிய வகையிலான
அனைத்திலிருந்தும் அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு பெற்றொர்களுக்கு உள்ளது.
சீரியல்கள்; சினிமாக்கள் :
இவைதான் பெரும்பாலானோர் வழிகெடுவதற்கு
முக்கிய காரணமாக விளங்குகின்றன. அனைத்து சீரியல்களுமே தவறான உறவுகளை
சித்தரிகக்கூடியவைகளாகவும், வன்முறையைத் தூண்ட வழிகோள்பவையாகவும்
உள்ளன. இவற்றை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் கேவலங்கள்தான் பின்னாளில்
பெரும்பெரும் விளைவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
சீரழிக்கும் செல்ஃபோன் :
படிக்கக்கூடிய பிள்ளைகளிடத்தில்
செல்ஃபோன்களை வாங்கிக் கொடுத்து, “சும்மா இருந்த சங்கை
ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்று சொல்வதுபோல பிள்ளைகளை வழிகெடுப்பதே இந்த
பெற்றோர்கள்தான். செல்ஃபோனிலிருந்து நமது பிள்ளைகளை காப்பாற்றினாலே பெரும்பாலான
பிரச்சனைகள் ஒழிந்துவிடும்.
(நமது மேற்கண்ட குற்றச்சாட்டை
உண்மைப்படுத்தும் வைகையில் அமைந்த சம்பவங்களை, “இன்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்! டிவியினால் பெருகும்
வன்முறைகள்!!” என்ற தலைப்பிலான கட்டுரையில் 13ஆம் பக்கத்தில் காண்க)
மேற்கண்டவைகளை தவிர்ந்து மார்க்க
போதனைகளை சரியான முறையில் அவர்களுக்கு புகட்டினால் நல்ல தலைமுறைகளை உருவாக்கலாம்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும்
உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள்
மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ்
ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்
ஆன் 66 : 6thanks: onlinepj.com

Post a Comment