தொழில் வாய்ப்பிற்கான அடையாள அட்டை கால அவகாசம் நிறைவடைந்து, சவூதி அரேபிய ஜெட்டா நகரில் தங்கியுள்ள இலங்கையர்கள் அடுத்தவாரம் தொடக்கம் கட்டம் கட்டமாக தாயகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொதுமுகாமையாளருமான மங்கள ரண்தெனிய தெரிவித்துள்ளார்.
சவூதியில் உள்ள இலங்கை தூதுரகம், சவூதி அரசாங்கத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். அவற்றின் காலவரையறை நிறைவடைந்த நிலையில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் ஜெட்டா நகரில் தொழில்வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.
அண்மையில் சவூதி அரேபிய அரசாங்கம், குறித்த அடையாள அட்டை அற்றவர்களை தொழில்களில் இணைத்துக் கொள்ள கூடாது என்று தொழில் வழங்குனர்களுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும். தமக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், தொழில்வாய்ப்புகள் தரக் கோரியும் குறித்த பணியாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அந்த நாட்டு காவல்துறையினரால் அவர்களுக்கு பலவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
ஆரம்ப தொழில் ஸ்தானத்திலிருந்து வெளியேறி இலங்கையர்கள் போன்றே இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஜெட்டா நகரில் தங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் இலங்கை பணியாளர்கள் தமது ஆரம்ப தொழில் ஸ்தானத்திற்கு செல்வதற்கு சவுதி அரசாங்கம் 3 மாத கால அவகாசம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment