பெண்ணின் அவலக்குரல் கேட்டு மசாஜ் நிலையம் முற்றுகை: நடந்தது என்ன? (இணைப்பு-2) / 2013ல் மனிதப் படுகொலைகள் குறைவாக காணப்படுகிறது -பொலீஸ் தரப்பு


 

Print Friendly
பெண்ணின் அவலக்குரல் கேட்டு மசாஜ் நிலையம் முற்றுகை: நடந்தது என்ன? 
திருகோணமலை அலஸ் தோட்டத்தில் இயங்கும் ‘மசாஜ் நிலையம்’ ஒன்றில் பெண்கள் துஷ்பிரயோகத்திற்குள்­ளான சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பலர் பஜரோ வாகன மொன்றில் தப்பித்துச் சென்றதுடன் சுய நினைவின்றி மீட்கப்­பட்ட பெண்ணொருவர் ஸ்தலத்துக்கு வந்த உப்புவெளி பொலிஸார் மீட்டு வைத்தியமனையில் அனுமதித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் நேற்றுக் காலை இவ்வாறான முறையற்ற நிலையங்­களை அகற்றுவதுடன் முறையாக இயங்கும் உடல் பிடிப்பு சுகாதார நிலையங்களை சுற்றுலா விடுதிக்குள் அல்­லது மக்கள் செறிந்து வாழாத இடங்களுக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றுக் காலை அக்கிராமத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் விவரிக்கையில்,
நேற்று திங்கள் இரவு சுமார் 10.30 மணியளவில் குறித்த உடல்பிடிப்பு சுகாதா நிலையத்தில் பெண்களின் அவலக் குரல் கேட்டது. குறிப்பாக ஒரு பெண் சிங்கள மொழியில் தன்னைக் காப்பாற்றுமாறு அலறிய சத்தம் கேட்டது.
இத­னையடுத்து நாம் உடன் உப்புவெளி பொலிஸாருக்கு முறையிட்டதுடன், இக்கிராம சேவகருக்கும் முறை­யிட்டோம்.
இதனையடுத்து பெண்ணின் அவலக்குரல் அதிகமாக கேட்டதனையடுத்து பெண்கள், ஆண்கள் என பொதுமக்கள் திரண்டு உரிய நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட வேளை அந்நிலையத்தில் இருந்து பஜரோ ரக வாகனமொன்றில் ஒரு பெண்ணையும் தூக்கி ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் மக்கள் உள்ளே சென்ற போது ஆடையின்றி ஒரு பெண் சுய நினைவில்லாத நிலையில் கிடந்தார். இவரை எமது பெண்கள் அங்குள்ள துணிகளைக் கொண்டு மூடினார்கள். அதன் பின்னர் பார்த்த­ போது அங்கு பணியாற்றுவதாக சொல்லப்படும் இரு பெண்கள் மற்றுமொரு அறையில் பூட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.
அவர்கள் தமக்கு இங்கு நடந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாதவர்கள் என காட்டிக் கொண்டனர். இதற்கிடையில் இன்னுமொரு ஆண் அங்கிருந்து பின் வழியால் தப்பித்து ஓடினார். அவரை பின்னர் துரத்திச் சென்று எமது மக்கள் பிடித்தனர்.
பின்னர் சுய நினைவின்றி இருந்த பெண்ணையும் பிடிக்கப்பட்ட ஆணையும் ஸ்தலத்திற்கு வந்து உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தோம் என இப்பகுதி கிராம மற்றும் மத ஸ்தாபனத் தலைவர் விபரித்தார்.
குறித்த நிலையத்தில் மக்கள் புகு முன்னர் அங்கிருந்த இடங்கள் அவசர அவசரமாக கழுவப்பட்டு இருந்ததாகவும், சம்பவத்தை நேரே சென்று அவதானித்த மாதர் சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இந்தச் சூழலில் சுய நினைவின்றி இருந்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்­கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் சுய நினைவுக்குத் திரும்பியதாக பொலிஸார் தெரிவித்­தனர்.
இப் பெண்கள் புத்தளம், கண்டி போன்ற இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எனவும் இம் மக்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி நேற்றுக் காலை அலஸ் தோட்டத்தில் திரண்ட மக்கள், ஊடகங்கள் மற்றும் திருகோணமலை பட்­டனமும் சூழலும் பிரதேச சபை உதவித் தவிசாளர் எஸ்.நிசாந்தன் ஆகியோரின் முன்னிலையில் விபரித்ததுடன், இவ்­வாறான முறையற்ற நிலையங்களை மூடிவிடுமாறும் பொது மக்கள் செறிந்து வாழும் இத்தகைய இடங்களில் அனுமதிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ஆலயங்கள், கல்வி நிலையங்கள் உள்ள இடங்களில் இவ்வாறான முறையற்ற நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமையையும் கண்டித்தனர். இதன்போது இப்பகுதி ஆண், பெண் இருபாலாரும் இவ்வெதிர்ப்பை வெளியிட்டனர்.
2013ல் மனிதப் படுகொலைகள் குறைவாக காணப்படுகிறது -பொலீஸ் தரப்பு-
2012ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் மனித படுகொலைச் சம்பவங்கள் 2013ம் ஆண்டில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012-01-01 தொடக்கம் 2012-04-19 வரையான காலப்பகுதியில் மனிதப் படுகொலை சம்பவங்கள் 219 பதிவானதாகவும் அதில் 265 பேர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஆண்டு 2013-01-01 தொடக்கம் 2013-04-19 வரை 185 மனித படுகொலைச் சம்பவங்கள் பதிவானதாகவும் அதில் 197 பேர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி 2012ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களை விட 2013ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 34 மனிதக் கொலைச் சம்பவங்களும் 68 மரணங்களும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger