மாகாணங்கள் இணைவதை ரத்து செய்ய இலங்கை யோசனை ?



இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை அடுத்து கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படி, இரு மாகாணங்கள் தாமாக விரும்பி இணைந்துகொள்ள வகை செய்யும் பிரிவை ரத்து செய்ய ஒரு அரசியல் சட்டத்திருத்தத்தை ஆளும் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த திவினெகும போன்ற, மாகாண அரசுகளின் பட்டியலில் உள்ள அதிகாரங்களில் மத்திய அரசு , சட்டம் கொண்டுவர விரும்பினால், தற்போது அனைத்து மாகாணங்களும் அங்கீகரித்தால் மட்டுமே அது சட்டமாகும் என்ற நிலையை மாற்றி, பெரும்பான்மை மாநிலங்கள் அங்கீகரித்தாலே போதும் என்ற நிலையை உருவாக்கவும் அரசு ஒரு உத்தேச திட்டத்தை முன்வைக்கப்போவதாகத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா, இது குறித்து  கூறுகையில், இந்தக் கூட்டத்தில் இந்த பிரேரணைகள் குறித்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாக தமக்குக் கொடுக்கப்பட்டாலும், அதற்குரிய போதிய விளக்கங்கள் இல்லாததால், இது குறித்து தன்னால் உடனடியாக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை என்றார்.
ஆனால் நாளை வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஏதேனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வந்தால், அது குறித்து முழுமையாகப் பரிசீலித்து ஒரு முடிவை தன்னால் எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகின்றபோது, இனவாத நிலைப்பாட்டையோ அல்லது தொடர்ந்து சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையையோ தவிர்க்கவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகும் இந்த நிலை தொடர்வது சரியல்ல என்றும் தான் இந்தக் கூட்டத்தில் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்து பேசுகையில், உங்களை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் உங்களை ( டக்ளஸை) அமைச்சரவையில் வைத்திருக்கிறோம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை வேறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினைகள் வேறு என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் 13வது சட்டத்திருத்தத்தின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைவிட கூடுதல் அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் குறைப்பது என்று இலங்கை அரசு உத்தேசித்தால் , அது குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்று கேட்ட்தற்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆராய்ந்துதான் பதிலளிக்கவேண்டும், ஏனென்றால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்று அரசு கூறும் போது, அவசரப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றார் டக்ளஸ்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger