லண்டன் மசூதியில் தீ: ராணுவ வீரர் கொலைக்கு பழிவாங்கும் செயலா? / வீட்டையே ஜெயிலாக மாற்றி முஷரப்பிடம் விசாரணை / வங்காளதேசத்தில் இந்து தலைவரை கொன்ற 5 பேருக்கு மரணதண்டனை

 

லண்டன் மசூதியில் தீ: ராணுவ வீரர் கொலைக்கு பழிவாங்கும் செயலா?-
லண்டன் நகரின் தென்கிழக்கில் உள்ள வுல்விச் என்ற பகுதியில், கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, லீ ரிக்பி என்ற ராணுவ வீரரை, புரட்சியாளர்கள் கொலை செய்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு ஈடுபடுவதை எதிர்க்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அன்றுமுதல், இருபிரிவினரும் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.
நேற்று புதன்கிழமை, இங்கிலாந்து நாட்டு நேரப்படி காலை 3.20 மணிக்கு வடக்கு லண்டனில், முஸ்வெல் ஹில் பகுதியில் உள்ள சமுதாய மையம் ஒன்று தீப்பற்றி எரிவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. 6 தீயணைப்பு வண்டிகளுடன் சென்ற 35 தீயணைப்பு வீரர்கள் போராடி, 4.40 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால், தீயினால் அங்கிருந்த மசூதி முற்றிலும் சேதமடைந்தது. அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதில்தான் சோமாலிய வீரர்களுக்கான நல்வாழ்வு மையம் இயங்கி வந்தது. அருகில் இருந்த மற்ற இரண்டு கட்டிடங்களில் இருந்தவர்களும் பத்திரமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஒரு பெண் மட்டும் அதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மசூதியின் சுவற்றில் எழுதப்பட்டு இருந்தவை லண்டன் பாதுகாப்புக் குழுவைக் குறிப்பதாக இருந்ததால் அதுகுறித்த விசாரணையில், தீவிரவாத எதிர்ப்பு காவல்துறையினர் இறங்கியுள்ளனர். அமைதியான சமூகத்தினரான தங்களுக்கு நடந்த இந்த அழிவு சோகத்தை அளிக்கின்றது என்று சோமாலிய தொண்டு நிறுவன உறுப்பினர் அலி அபு தெரிவித்தார்.
முஸ்லிம் எதிர்ப்பும் பெருகி உள்ளதாகவும், அதுகுறித்த கவனம் வேண்டும் என்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமைப்பின் ஆர்வலர் ஃபியாஸ் முகல் கூறினார். சோமாலியர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
வீட்டையே ஜெயிலாக மாற்றி முஷரப்பிடம் விசாரணை:
பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கு விசாரணையை பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. முஷரப் மீதான நீதிபதிகள் சிறை வைக்கப்பட்ட வழக்கு போன்றவற்றை தீவிரவாத எதிர்ப்பு நீதிபதி கவுகர் அப்பாஸ் ஜைடி விசாரிக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களாக அவர் முஷரப் வீட்டுக்கு சென்று வழக்கு விசாரணையை தொடங்கலாம். இதற்காக முஷரப்பின் பண்ணை வீட்டை தற்காலிக ஜெயிலாக மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முஷரப் வீட்டுக்கு செல்லும் நீதிபதிக்கு குண்டு துளைக்காத கார் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் இந்து தலைவரை கொன்ற 5 பேருக்கு மரணதண்டனை-
வங்காளதேசத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வழக்கறிஞர் காளிதாஸ் பரல் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்து, கிறிஸ்தவ, புத்தமதத்தவரை உள்ளடக்கிய ஒய்கியா பரிசத்தின் தலைவராகவும், பூஜா உட்ஜாபன் பரிசத் மற்றும் அப்பகுதி அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றியவர்.
வழக்கறிஞர் காளிதாசை, அவரது கட்சியின் அரசியல் எதிரிகளே சுட்டுக்கொன்றனர் என்று 24 பேரின் மீது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 5 பேருக்கு மரண தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 9 பேரை விடுவித்தும் நீதிபதி எஸ்.எம். சுலைமான் தீர்ப்பு கூறினார்.
தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்று கூறி காளிதாசின் மனைவி மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger